இங்கிலாந்தில் ஹெலிகாப்டர் விபத்து-16 பேர் பலி
லண்டன்: இங்கிலாந்தில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவன ஊழியர்கள் 14 பேர் உட்பட 16 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் நடுக்கடலில் விழுந்தது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் சென்ற அனைவரும் பலியாயினர்.
பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று மில்லர் எண்ணெய் நிறுவனத்தில் இருந்து ஒப்பந்தக்காரர்கள் மற்றும் தொழிலாளர்கள் 14 பேரை ஏற்றி கொண்டு அபர்தீன் நோக்கி வந்தது. இவர்களுடன் 2 விமானிகளும் இருந்தனர்.
வடகிழக்கு ஸ்காட்லாந்து கடற் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது ஹெலிகாப்டர் தனது கட்டுப்பாட்டை இழந்து திடீரென கடலில் வீழ்ந்தது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த 16 பேரும் பலியானார்கள்.
இதையடுத்து 15 படகுகளும், ராயல் பிரிட்டிஷ் விமான படையும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இதுவரை 8 பேரின் சடலங்கள்மீட்கப்பட்டுள்ளன.
இந்த விபத்து குறித்து இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் வருத்தம் தெரிவித்துள்ளார்.