வெல்லிங்டன்: கம்பீர் இன்னும் ஒரு அபார சதத்தைப் போட்டதால், இந்தியா, வெல்லிங்டன் டெஸ்ட் போட்டியில் 531 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையை அடைந்துள்ளது.இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் வெல்லிங்டனில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 379 ரன்களும், நியூசிலாந்து 197 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 182 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்தியா இரண்டாவது நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்திருந்தது. கம்பீர் 28, டிராவிட் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. அட்டகாசமாக பேட் செய்தார் கம்பீர். அவரை அவுட் செய்ய முடியாமல் நியூசிலாந்து பவுலர்கள் சோர்ந்து போயினர்.மறுமுனையில் இவருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்தார். இருவரும் விரைவாக அரை சதத்தைக் கடந்தனர்.இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்த நிலையில் டிராவிட் வெட்டோரி சுழலில் அவுட்டானார். இவர் 10 பவுண்டரி உட்பட 60 ரன்கள் எடுத்தார்.அடுத்து வந்த சச்சின் 9 ரன்களுக்கு அவுட்டானார். இந்நிலையில் பொறுப்புடன் விளையாடிய கம்பீர் சதம் பதிவு செய்தார். இது அவரது 6வது டெஸ்ட் சதமாகும். 167 ரன்களுக்கு அவுட்டானார் கம்பீர்.அடுத்து வந்த லட்சுமண் அரைசதம் கடந்து அவுட்டானார். இவர் 109 பந்தில் 60 ரன்கள் எடுத்தார்.ஆட்ட நேர இறுதியில், டோணி 16, யுவராஜ் 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி மூன்றாவது நாளி்ல் 5 விக்கெட் இழப்புக்கு 349 ரன்கள் எடுத்து, 531 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.நாளை இன்னும் கொஞ்சம் ரன்களைச் சேர்த்து விட்டு இந்தியா டிக்ளேர் செய்யலாம். பெரிய ஸ்கோர் என்பதால் சேஸ் செய்வது நியூசிலாந்துக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும்.எனவே இந்தியா டெஸ்ட் தொடரை வெல்ல மிக மிக அதிக வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே இந்தியா ஒரு நாள் போட்டித் தொடரை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #13;