'வன்னியர்களை ஏமாற்றிய ராமதாஸுக்கு பாடம்'
சென்னை: வன்னியர் சமுதாயத்தின் பெயரை மட்டுமே பயன்படுத்திக் கொண்டு, அவர்களது உயர்வுக்காக ஒன்றுமே செய்யாத டாக்டர் ராமதாஸுக்கும், பாமகவுக்கும், வன்னியர்கள் சரியான பாடம் கற்றுக் கொடுத்து விட்டனர் என்று பல்வேறு வன்னியர் அமைப்புகள் கூறியுள்ளன.
பாமகவுக்கு இப்படி ஒரு தோல்வி கிடைக்கும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக டாக்டர் ராமதாஸ் மிகப் பெரும் அதிர்ச்சியில் உள்ளார்.
கள்ள ஓட்டுப் போட்டு விட்டனர், பணத்தைப் பாய விட்டு வாக்காளர்களை விலைக்கு வாங்கி விட்டனர், பாமகவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக திமுகவினர் கடுமையாக உழைத்தனர், பாமகவினர் போட்டியிட்ட தொகுதிகளில் வழக்கத்தை விட கூடுதலாக வாக்குகள் பதிவாகியுள்ளது என்று டாக்டர் ராமதாஸ் பல்வேறு காரணங்களைக் கூறி வருகிறார்.
ஆனால் வன்னியர்களுக்கு துரோகம் செய்ததே, டாக்டர் ராமதாஸுக்கும், அவரது கட்சியினருக்கும் கிடைத்த இந்தத் தோல்விக்குக் காரணம் என அவரது எதிர்ப்பு வன்னியர் அமைப்பினர் கூறியுள்ளனர்.
டாக்டர் ராமதாஸை நீண்ட காலமாக எதிர்த்து வரும் வன்னியர் சங்கத் தலைவர் ஏ.கே.நடராஜன் கூறுகையில், வன்னியர் சமுதாயத்தின் உயர்வுக்காக டாக்டர் ராமதாஸ் எதுவுமே செய்ததில்லை.
ஆனால் தனது நலனையும், தனது குடும்பத்தினர் நலனையும், தனது மகனின் நலனையும் மட்டுமே மனதில் கொண்டு இத்தனை காலமாக வன்னிய சமுதாயத்தின் ஓட்டுக்களை சுயநலமாக பயன்படுத்தி அனுபவித்து வந்தார்.
ஆனால் இந்த உண்மையை இப்போது வன்னிய சமுதாயம் உணர்ந்து விட்டது. வன்னிய மக்கள் டாக்டர் ராமதாஸுக்கு சரியான பாடம் கற்றுக் கொடுத்து விட்டனர் என்றார்.
பாட்டாளி மக்கள் முன்னேற்றக் கட்சி தலைவர் சி.என்.ராமமூர்த்தி கூறுகையில், இந்தத் தோல்விக்குப் பொறுப்பேற்று அன்புமணி ராமதாஸ் தனது ராஜ்யசபா உறுப்பினர் பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
பாமகவின் பழைய வரலாறு..
1989ம் ஆண்டு முதல் முறையாக பாமக தேர்தலில் போட்டியிட்டது. அத்தேர்தலில் 26 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது. அனைத்திலும் தோல்வி கண்டது.
1991ம் ஆண்டு தேர்தலிலும் பாமக தனித்துப் போட்டியிட்டது. ஆனால் அதிலும் தோல்வியே.
1996ம் ஆண்டு வாழ்ப்பாடி ராமமூர்த்தியுடன் கூட்டு சேர்ந்து சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு நான்கு இடங்களில் வென்றது.
1998ம் ஆண்டு அதிமுகவுடன் சேர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்த பாமக லோக்சபா தொகுதிகளில் வெற்றி பெற்றது.
1999ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின்போது திமுக கூட்டணிக்குத் தாவி தேர்தலை சந்தித்த பாமக, எட்டு தொகுதிகளில் போட்டியிட்டு ஐந்தில் வென்றது.
2001ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியை விட்டு விலகி அதிமுகவுடன் கை கோர்த்தார் ராமதாஸ். இந்தக் கூட்டணியின் உதவியால் 20 சட்டசபைத் தொகுதிகளில் பாமக வெற்றி பெற்றது.
பின்னர் 2004ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மீண்டும் திமுக கூட்டணிக்கு வந்தார் ராமதாஸ். ஆறு சீட்களில் போட்டியிட்டு ஆறிலும் வெற்றி பெற்றது பாமக.
அதன் பின்னர் 2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி வைத்தார் ராமதாஸ். இம்முறை பாமகவுக்குக் கிடைத்தது 17 தொகுதிகள்.
இந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் இணைந்தார் ராமதாஸ். ஆனால் கிடைத்ததோ பூஜ்ஜியம்தான்.
பாமக எங்கு இருக்கிறதோ அங்கு வெற்றி இருக்கிறது. பாமக இடம் பெறும் அணியே வெற்றிக் கூட்டணி என்று கூறுவார் டாக்டர் ராமதாஸ். ஆனால் இம்முறை மாம்பழம் அவருக்கு சுவை தர மறுத்து விட்டது.