சென்னை விமானப் பணிப் பெண் சாவில் மர்மம்
பிகாரைச் சேர்ந்தவரான நிதின் குமாரி ஏர் இந்தியா நிறுவனத்தில் தற்காலிகமாக விமானப் பணி்ப் பெண்ணாக பணியாற்றி வந்தார்.
சென்னை ஜெ.ஜெ. நகர் கோல்டன் ஜார்ஜ் நகரில் வசித்து வந்தார். இவர் தனது பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். முதலில் இவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கருதப்பட்டது.
ஆனால், நிதின்குமாரியின் பிணம் கட்டிலுக்கும், சுவருக்கும் இடையே தலைகுப்புற கிடந்தாலும், பிணத்தை மறைக்கும் வகையில் 2 சூட்கேஸ்கள் வைக்கப்பட்டிருந்தாலும் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஆனால், அவர் உள்புறமாக பூட்டிய வீட்டுக்குள் இறந்து கிடந்ததால் அவர் எப்படிக் கொல்லப்பட்டார் என்பதில் மர்மம் நீடிக்கிறது.
மேலும் நிதின்குமாரி இறந்து 76 மணி நேரம் கழித்துத்தான் பிணம் மீட்கப்பட்டதால் உடல் மிகவும் அழுகிவிட்டது. இதனால் உடலில் இருந்த தடயங்கள் மூலம் அவரது இறப்பு எப்படி நடந்தது என்று டாக்டரால் உறுதி செய்ய முடியவில்லை.
இதையடுத்து நிதின்குமாரியின் உடல் உறுப்புக்கள் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த சோதனை முடிவுகள் வந்த பின்னரே இந்த வழக்கில் தெளிவான நிலை ஏற்படும்.
பிரேதப் பரிசோதனைக்குப் பின் நிதின்குமாரியின் உடல் பிகாரிலிருந்து வந்த அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, சென்னையிலேயே தகனம் செய்யப்பட்டது.
நிதின்குமாரியின் லேப் டாப்பில் உள்ள படங்களில் அவர் ஆண் ஒருவரோடு மிக நெருக்கமாக உள்ள படங்கள் உள்ளன. அவர் பிகாரை சேர்ந்த ராஜாத் சிங் என்று தெரியவந்துள்ளது. இருவரும் 11 ஆண்டுகளாக காதலித்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் நிதின்குமாரியை சென்னையைச் சேர்ந்த ஒரு வாலிபர் ஒருதலையாய் அவரை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் தெரிய வந்துள்ளதால் அவர் தான் நிதின் குமாரியை கொலை செய்தாரா என்ற விசாரணையும் நடக்கிறது. அந்த வாலிபரை அடையாளம் காணும் பணியும் நடக்கிறது.