இலங்கை தீர்மானம்-பிரதமருக்கு கருணாநிதி கோரிக்கை
இலங்கை தமிழர்களின் நிலை குறித்து விவாதிக்க ஜெனீவாவில் அவசரமாகக் கூடும் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலிடம் இலங்கை அரசு ஒரு தீர்மானத்தை முன் மொழிந்துள்ளது.
அதில், தமிழர்களுக்கு நிவாரணத்தை இலங்கை அரசே வழங்கும் என்றும், இதில் மற்ற நாடுகள் தலையிடக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தை இலங்கைக்கு மிக நெருக்கமான நாடான சீனா ஆதரிக்கும் நிலையில் இதை இந்தியாவும் ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. இது தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியைப் பரப்பியுள்ளது.
தமிழர்களுக்கு முகாம்கள் என்ற பெயரில் மகா கொடுமையான முகாம்களை இலங்கை அரசு அமைத்துள்ளது. அங்கு தமிழர்களுக்கு உரிய உணவோ, நீரோ, மருந்தோ வழங்கப்படாததை நேரில் பார்த்து அதிர்ந்த ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், தமிழர்களுக்கு உதவ ஐ.நா மற்றும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடு்த்துள்ளார். இதை இலங்கை ஏற்கவில்லை.
இந் நிலையில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் ஸ்விட்சர்லாந்து ஒரு தீர்மானத்தை முன் மொழிந்துள்ளது. அதன்படி வெளிநாட்டு தொண்டு அமைப்புகளை இலங்கை அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து சீனாவி்ன் ஆதரவோடு இலங்கை ஒரு தீர்மானத்தை முன் மொழிந்துள்ளது. இதற்கு இந்தியாவும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந் நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி அனுப்பியுள்ள கடிதத்தில்,
இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவது அந்நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும், சுதந்திரத்தையும் பாதிக்கும் செயல் என்று ஒரு தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டாலும் இலங்கை பிரச்சனையை ஒரு சிறப்பு நிகழ்வாக எடுத்து கொள்ள வேண்டும்.
ஐ.நா. மனித உரிமை கவுன்சில் முன்பு இலங்கை அரசு சமர்ப்பித்துள்ள வரைவு தீர்மானம் இலங்கை தமிழரின் நலனுக்கு எதிரானதாக உள்ளது என்று உலகம் முழுவதும் பரவியுள்ள லட்சக்கணக்கான தமிழர்கள் நம்புகிறார்கள்.
எனவே இலங்கை தமிழர் மக்களின் உணர்வுகளையும், அவர்களது வருங்கால நலனையும் கருத்தில் கொண்டு இந்த விஷயத்தில் உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டு கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.