தோல்விக்கு காரணம் சிரஞ்சீவி தான்-நாயுடு புலம்பல்
ஹைதராபாத்: நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் அபார வெற்றி பெற்றிருக்கும். ஆனால் சிரஞ்சீவியின் பிரஜ்ஜா ராஜ்யம் கட்சி காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளை பிரித்துவிட்டதாக அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சியின் மாநாடு செகந்திராபாத் நகரில் நடந்தது. அதில் நாயுடு பேசுகையில்,
இந்தத் தேர்தலில் மக்கள் காங்கிரஸ் கட்சியை நிராகரித்துவிட்டனர். அவர்களுக்கு எதிராக மூன்றில் இரண்டு பங்கு வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக 36.78 சதவீத மக்கள் மட்டும் ஓட்டு போட்டுள்ளனர். இவர்களை விட தெலுங்கு தேசம் கூட்டணிக்கு 1.5 சதவீத ஓட்டுக்கள் தான் குறைவாக கிடைத்துள்ளது.
நாங்கள் இதைவிட அதிக வாக்கு வாங்கியிருக்க முடியும். ஆனால் சிரஞ்சீவியின் பிரஜ்ஜா ராஜ்யம் கட்சி அந்த ஓட்டுக்களை பிரித்துவிட்டது. அவர்கள் 16.22 சதவீத ஓட்டு வாங்கியுள்ளனர். ஆனால், 18 சட்டசபை தொகுதிகளில் தான் வென்றுள்ளனர். இந்த தேர்தலில் சிரஞ்சீவி செய்த ஒரே வேலை ஓட்டுக்களை பிரித்து காங்கிரசுக்கு உதவியது தான்.
தெலுங்கு தேசம் தொண்டர்கள் அடுத்த தேர்தலில் இதுபற்றி மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும். சிரஞ்சீவி கட்சிக்கு ஓட்டு போடுவது வீண் என்று மக்களிடம் நன்றாக விளக்க வேண்டும்.
இந்த முறை தேர்தலில் எங்களுக்கு நல்ல முன்னேற்றம் தான். கடந்த முறை 42 சீட் தான் கிடைத்தது. இந்த முறை சிரஞ்சீவி வாக்குகளை பிரித்த போதிலும் எங்கள் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது.
தெலுங்கு தேசம் கட்சி தொடர்ந்து மக்களுக்காக போராடும். லஞ்சத்தை விரட்ட வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம் என்றார் சந்திரபாபு நாயுடு.