2 அக்காள்கள்-சிறுவனை அடித்துக் கொன்ற தம்பி
நெல்லை: நடத்தையில் சந்தேகப்பட்டு தனது இரு சகோதரிகளையும், சகோதரியின் 5 வயது மகனையும் கொலை செய்த தம்பி போலீசில் சரணடைந்தார்.
நெல்லை மாவட்டம் சுரண்டை பகுதியைச் சேர்ந்த விவசாயி கடற்கரையின் மகள்கள் லட்சுமி (40), மகேஸ்வரி (32), மகன் இசக்கிசெல்வம் (28).
விவாகரத்து பெற்றுவிட்ட லட்சுமி கடந்த 4 ஆண்டுகளாக தனது மகன் மாதவனுடன் (5) தந்தை வீட்டில் வசித்து வந்தார்.
இசக்கிசெல்வம் தனது மனைவி பார்வதியோடு அருகே வேறோரு வீட்டில் வசித்து வருகிறார்.
இந் நிலையில் லட்சுமி மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் நடத்தை குறித்து சிலர் தவறாக பேசியதால் அக்காள்களை இசக்கி செல்வம் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், தனது மனைவியின் தூண்டுதலின் பேரில்தான் இசக்கிசெல்வம் தங்களை கண்டிப்பதாக கூறி லட்சுமியும், மகேசுவரியும் நேற்று காலையில் பார்வதியிடம் சென்று வாக்குவாதம் செய்தனர். அப்போது பார்வதியை அவர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அப்போது இசக்கி செல்வம் வீட்டில் இல்லை.
வீட்டுக்கு வந்த அவரிடம் நடந்த விவரங்களை மனைவி பார்வதி கூறவே ஆத்திரமடைந்த இசக்கிசெல்வம் உருட்டுகட்டையுடன் தந்தையின் வீட்டுக்குச் சென்று லட்சுமியின் தலையில் அடித்தார். இதில் அவரது மண்டை பிளந்து அங்கேயே இறந்தார்.
இதைப் பார்த்து அலறிய மகேஸ்வரியையும் உருட்டுக் கட்டையால் தலையில் அடித்து தாக்கி கொன்றார்.
இதைப் பார்த்து பயத்தில் அழுது கதறிய சிறுவன் மாதவனையும் உருட்டுக் கட்டையால் தலையில் அடித்துக் கொன்றார்.
பின்னர் சுரண்டை போலீஸ் நிலையத்தில் இசக்கி சரணடைந்தார்.