ஜாக்சன் குறித்த தேடுதல்களால் இன்டர்நெட் ஸ்தம்பித்தது
சான்ஜோஸ்: பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சன் மறைவுச் செய்தியையடுத்து உலகம் முழுவதும் மரணச் செய்தியைத் தெரிந்து கொள்ளவும், அவர் குறித்த தகவல்களை அறியவும் கோடிக்கணக்கான பேர் இன்டர்நெட்டை அலசியதால் உலகம் முழுவதும் இன்டர்நெட் இன்று ஸ்தம்பித்துப் போனது.
குறிப்பாக கூகுள் நிறுவனத்தின் சர்ச் இணையதளம் ஸ்தம்பித்தது. மிக மிக மெதுவாக அது இயங்கியதால் கூகுள் தளத்தை சரிவர பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
ஜாக்சன் மரணச் செய்தி பரவிய சில விநாடிகளில் கோடிக்கணக்கான பேர் கூகுளை முற்றுகையிட்டதால் அது ஸ்தம்பித்துப் போய், முடிவுகளைக் காட்டுவதற்குப் பதில் 'எர்ரர்' என்று காட்டியது.
மேலும், உங்களது தேடுதல், கம்ப்யூட்டர் வைரஸ் அல்லது ஸ்பைவேர் புரோகிரமாக இருக்கக் கூடும் என்றும் மெசேஜ் காட்டியது.
பசிபிக் நேரப்படி 2.40 மணி முதல் 3.15 மணி வரை கூகுளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக அதன் வாடிக்கையாளர்கள் தெரிவித்ததாக கூகுள் செய்தித் தொடர்பாளர் காப்ரியேல் ஸ்டிரைக்கர் தெரிவித்தார்.
அந்த சமயத்தில்தான் ஜாக்சன் மரணச் செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாக்சன் மறைவுச் செய்தி வெளியான அடுத்த சில நிமிடங்களில் வழக்கமாக வரும் டிராபிக்கை விட 48 சதவீத அளவுக்கு அதிகரித்த டிராபிக் காணப்பட்டதாக கூகுள் தெரிவித்துள்ளது.
கூகுள் மட்டுமல்லாமல் ட்விட்டரும் கூட இதே நிலையைத்தான் சந்தித்தது. அதன் சர்வரும் கூட சற்று நேரத்தில் டவுன் ஆகி விட்டது.
மைக்கேல் ஜாக்சன் மறைவுக்குப் பின்னர் ட்விட்டர் மூலம் அனுப்பப்பட்ட (மைக்கேல் ஜாக்சன் குறித்த) செய்திகளின் எண்ணிக்கை ஒரு மணி நேரத்திற்கு 1 லட்சத்திற்கும் மேல் என்று தெரிய வந்துள்ளது.
இது கிட்டத்தட்ட ஈரான் செய்திகளுக்கு நிகரானதாம். ட்விட்டர் மூலம் ஜூன் 16ம் தேதி ஈரான் குறித்து ஒரு மணி நேரத்தி்ல 1 லட்சம் மெசேஜ்கள் போனது. சற்று நேரத்தில் அது 2,20,000 ஆக உயர்ந்தது. தான் சாதனையாக இருந்தது.
விக்கிபீடியாவும் ஜாக்சன் மறைவுச் செய்தியால் சற்று ஆடிப் போனது. காரணம், ஜாக்சன் குறித்த தகவல்களை அது உடனுக்குடன் அப்டேட் செய்ததால் பெரும் குழப்பமாகி விட்டதாம். ஏகப்பட்ட பேர் ஒரே நேரத்தில் அப்டேட் செய்ய புகுந்ததால் வந்த குழப்பமாம் இது.
அதேபோல ஜாக்சன் செய்தியை முதலில் வெளியிட்ட இணையதளங்களில் ஒன்றான டிஎம்இசட்டின் சர்வரும் கிராஷ் ஆகி விட்டதாம்.
இதுதவிர யாஹூ, ஏஓஎல், சிபிஎஸ், சிஎன்என், எம்எஸ்என்பிசி ஆகியவையும் கூட இதேபோன்ற பிரச்சினைகளை சந்தித்தனவாம்.
செய்தித் தளங்கள் அனைத்துமே கிட்டத்தட்ட இதே நிலையைத்தான் சந்தித்துள்ளன. வழக்கமான வேகத்தை விட மிக மிக மெதுவான வேகத்தில்தான் அவை இயங்கின.