அழகிரியின் 100 நாள் செயல் திட்டம்!
ரசாயனம் மற்றும் உரத்துறைக்கான 100 நாள் செயல் திட்டத்தை அமைச்சர் அழகிரி இன்று வெளிட்டார்.
அதன் முக்கிய அம்சங்கள்:
கடந்த ஆண்டைப் போல தென் மாநிலங்களில் உரத் தட்டுப்பாடு ஏற்படாது. இந்த மாநிலங்களுக்கு தேவையை விட அதிகமாகவே உரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பு வைக்கப்படும். நாடு முழுவதுமே விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
உதாரணத்துக்கு ஆந்திராவுக்கு ஏப்ரல்-ஜூன் மாதத்தில் 3 லட்சம் டன் யூரியா தான் தேவை என்றாலும் 6.18 லட்சம் டன் யூரியாவை அனுப்பி வைத்துவிட்டோம். இதனால் தட்டுப்பாடே வராது.
அதே போல உர மானியம் விரைவில் கிடைக்கச் செய்யப்படும். மானியம் வழங்குதற்காக இந்த ஆண்டு ரூ. 1.17 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஹிந்துஸ்தான் பெர்டிலைசர்ஸ் மற்றும் பெர்டிலைசர் கார்பரேசன் ஆப் இந்தியா ஆகிய நிறுவனங்களின் மூடப்பட்ட 8 தொழிற்சாலைகளையும் ஆகஸ்ட் 30ம் தேதிக்குள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதே போல நிதிச் சிக்கலில் மாட்டியுள்ள திருவாங்கூர் உரத் தொழிற்சாலை மற்றும் மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் ஆகிய நிறுவனங்களை சீரமைக்கப்பட்டு அவை லாபத்துடன் இயங்க வகை செய்யப்படும்.
உரத் தயாரிப்பு நிறுவனங்களுக்குத் தேவையான எரிவாயுவை கோதாவரி பேசின் பகுதியில் இருந்து கிடைக்கச் செய்ய வகை செய்யப்படும். இங்கு எரிவாயு உற்பத்தி செய்யும் ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து போதிய அளவில் எரிவாயுவை உர நிறுவனங்களுக்குக் கிடைக்கச் செய்ய பிரதமரிடம் கூறியுள்ளோம்.
மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும் போதிய உதவிகள் தரப்பட்டு சாதாரண மக்களுக்கு ஏற்ற விலையில் மருந்துகள் கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
நலிவடைந்த நிலையில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான மருந்து நிறுவனங்களுக்கு உயிரூடப்பட்டு அவை சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.