நீதிபதிகள் சொத்துக் கணக்கை கண்டறிய புதிய சட்டம் -மொய்லி
டெல்லி: நீதிபதிகளின் சொத்து கணக்கை ஆராய புதிய சட்ட மசோதா வரும் பட்ஜெட் தொடரின் போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மொய்லி கூறுகையில்,
நீதித்துறையை சுத்தமாக்கும் நோக்கத்தில் நீதிபதிகளின் சொத்து கணக்குகளை காட்ட வகை செய்யும் சட்ட மசோதா வரும் 2ம் தேதி துவங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படும்.
இதற்கான சட்டம் தயாரிக்க வரைவு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டம் குறித்து நீதித்துறையுடன் ஆலோசித்து வருகிறோம். விரைவில் மத்திய அமைச்சரவை கூட்டத்தின் கவனத்துக்கு இது கொண்டு செல்லப்படும்.
தற்போது நீதிமன்றத்தில் அதிக அளவில் வழக்குகள் தேங்கி கிடக்கின்றன. இதை குறைக்க ஒரு வழக்கை எடுக்க எடுத்துகொள்ளப்படும் கால அவகாசம் 15 ஆண்டுகளில் இருந்த 3 ஆண்டுகளாக குறைக்க ஆலோசித்து வருகிறோம்.
இன்றைய சூழ்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மட்டும் 50 ஆயிரத்து 613 வழக்குகள் நிலுவையில் உள்ளன. உயர் நீதிமன்றங்களில் சுமார் 38 லட்சம் வழக்குகளும், மாவட்ட நீதிமன்றங்களில் சுமார் 2.64 வழக்குகளும் விசாரணை முடிவுக்காக காத்திருக்கின்றன.
உயர் நீதிமன்றங்களில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நிலைமை தான் மோசமாக இருக்கிறது. இதை தொடர்ந்து பாட்னா, சென்னை உயர் நீதிமன்றங்களில் அதிக வழக்குகள் தேங்கி கிடக்கின்றன.
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி செளமித்ரா சென் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்படு்ம். நாடு முழுவதும் 100 புதிய சிபிஐ நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
கற்பழிப்பு என்பது கொலையை காட்டிலும் மோசமானது. இதனால் கற்பழிப்பு வழக்குகளில் கடுமையான தண்டனைகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் மொய்லி.