தமிழகத்தில் அகதிகள்-இலங்கை அறிக்கை தாக்கல்
கொழும்பு: தமிழக அகதிகள் முகாம்களில் உள்ள அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த இலங்கை நாடாளுமன்ற சிறப்புக் கமிட்டியின் இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியைச் சேர்ந்த எம்.பி. ராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையிலான இந்தக் கமிட்டியி்ல அனைத்துக் கட்சிகளின் எம்.பிக்களும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த அறிக்கையில், இந்தியாவை வம்சாவளியாகக் கொண்ட 27 ஆயிரம் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவது, இலங்கையில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கான வசதிகள் உள்ளிட்டவை குறித்து இந்தக் குழு ஆராய்ந்து பரிந்துரைகளை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியா சென்ற பின்னர் அங்கு கற்றுக் கொண்ட படிப்புக்கு அங்கீகாரம் வழங்குவது, அவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்குவது, இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் தொழிற் பயிற்சி அளிப்பது, நிரந்தர வீடுகள் வழங்குவது, குடியுரிமை தொடர்பான பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை வழங்குவது உள்ளிட்டவை குறித்து எங்களது ஆய்வில் கணக்கெடுத்துக் கொண்டோம்.
தற்போது இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளோம். விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார்.