தமிழ் பெண் நிருபர் கடத்தல்-யாழ்ப்பாண தமிழ் நாளிதழ்களுக்கு தீ
கொழும்பு: கொழும்பில் தமிழ் பெண் பத்திரிக்கையாளரை போலீசார் கடத்திச் சென்றனர்.
அதே போல யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் தமிழ்ப் பத்திரிக்கைகளை இலங்கை உளவுத் துறையினர் வினியேகஸ்தர்களிடம் இருந்து பறித்து தீ வைத்தனர். மேலும் வினியோகஸ்தர்களையும் பயங்கரமாகத் தாக்கினர். இந்தச் சம்பவத்தில் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தொடர்பிருப்பதாகத் தெரிகிறது.
கிருஷ்ணி இபாம் என்ற அந்தப் பெண் பத்திரிக்கையாளர் பல்வேறு தமிழ் நாளிதழ்களில் கட்டுரைகள் எழுதி வருகிறார். இவர் கடந்த புதன்கிழமை காலை கொழும்பில் உள்ள தனது வீட்டின் வெளியே வந்தபோது அவரை போலீசார் சிலர் வேனில் ஏறுமாறு கூறினர்.
கண்ணைக் கட்டி வேனில் அமர வைத்து நெடு நேரம் பல இடங்களிலும் சுற்றிய அவர்கள், இனி நீ பத்திரிக்கைகளில் எழுதக் கூடாது என்று வழியெங்கும் மிரட்டினர்.
இறுதியில் இரவில் கிருஷ்ணியை கண்டி அருகே ஒரு இடத்தில் இறக்கிவிட்டுச் சென்றனர்.
அதே போல கொழும்பில் தமிழ்ப் பத்திரிக்கைகளில் ராசிபலன் எழுதி வரும் தமிழர் ஒருவரையும் போலீஸ் கிரிமினல் புலனாய்வுப் பிரிவி்ன் அடையாள அட்டைகளைக் காட்டிய சிலர் கடத்திச் சென்றுள்ளனர். அவர் இன்னும் விடுவிக்கப்படவில்லை. அவரது நிலைமை என்ன ஆனது என்று தெரியவில்லை.
யாழ்பாணத்தில் தமிழ் பத்திரிக்கைகளுக்கு தீ:
இந் நிலையில் தேசிய பாதுகாப்பு தமிழ் முன்னணி என்ற அமைப்பு, விடுதலைப் புலிகளுக்கு எதிரான செய்திகளை கட்டாயம் பிரசுரிக்குமாறு யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகைகளுக்கு தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுத்தது.
இந்த மிரட்டலுக்குப் பணிய மறுத்த 'வலம்புரி', 'உதயன்', 'தினக்குரல்' ஆகிய தமிழ் பத்திரிகைகளை நேற்று அதிகாலையில் வினியோகம் செய்யச் சென்ற வாகனங்களை ஆனைப்பந்தி, கன்னத்திடி பகுதிகளில் ஆயுதம் தாங்கிய கும்பல் வழிமறித்தது.
பின்னர் பத்திரிக்கைகளுக்கு அந்தக் கும்பல் தீ வைத்ததோடு வினியோகஸ்தர்களையும் கொடூரமாகத் தாக்கியது.
இந்த சம்பவம் நடந்தபோது சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் யாழ்ப்பாணத்தில் முகாமிட்டிருந்தனர். இதனால் இதன் பின்னணியில் அமைச்சர்களுக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலை நடத்தியதே இலங்கை உளவுத் துறையினர் தான் என்றும் தெரிய வருகிறது.
இதற்கு தமிழ் தேசிய கூட்டணியின் எம்பிக்கள் சேனாதிராஜா, சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண நகராட்சி கவுன்சில் தேர்தலுக்கான மனுத் தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறாது என்பதையே இந்தத் தாக்குதல் சம்பவங்கள் காட்டுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.