இலங்கை: அதிமுக-மதிமுக வெளிநடப்பு
சென்னை: ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக இலங்கை அரசு சர்வதேச நீதிமன்றத்தில் வளக்குத் தொடர்வது குறித்து இன்று சட்டசபையில் அதிமுக கொண்டு வந்த தனி நபர் தீர்மானத்துக்கு சபாநாயகர் அனுமதி தராததை கண்டித்து அக் கட்சியினரும் மதிமுக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் அதிமுக உறுப்பினர் ஜெயக்குமார் எழுந்து, இலங்கையில் சர்வதேச போர் நெறிமுறைகளை மீறி 50,000 பேர் படுகொலை செய்யப்பட்டது குறித்தும், இது தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது குறித்தும் பிரச்சனை ஏழுப்ப முயன்றார்.
அதற்கு சபாநாயகர் ஆவுடையப்பன், இந்த பிரச்சனையை நேற்று தான் என்னிடம் கொடுத்தீர்கள், அது என் ஆய்வில் உள்ளது என்று கூறி பேச அனுமதி மறுத்தார்.
இதையடுத்து அதிமுகவினர் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக மதிமுக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.
வெளியே வந்த ஜெயக்குமார் நிருபர்களிடம் பேசுகையில், இனப் படுகொலையை நிகழ்த்திய இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கோரி ஒரு தனி நபர் தீர்மானம் கொடுத்து பேச முயன்றோம். ஆனால், சபாநாயகர் ஆவுடையப்பன் அனுமதி மறுத்ததால் வெளிநடப்பு செய்தோம் என்றார்.