வரதட்சணை கொடுமை: தாய்-மகள் எரித்து கொலை
நாகர்கோவில்: வரதட்சணை கொடுக்காத குற்றத்திற்காக தாயும், மகளும் கொடூரமாக எரித்துக் கொலை செய்யப்பட்டனர். இருவரும் எரிந்து சாம்பல் மட்டுமே மிஞ்சியது.
இச்சம்பவத்தில் போலீஸார் கொல்லப்பட்ட பெண்ணின் கணவர் உள்பட 3 பேரைக் கைது செய்துள்ளனர்.
நாகர்கோவிலை அடுத்த கோட்டவிளையைச் சேர்ந்தவர் தவமணி. இவரது மகள் தேவிகா (27). இவருக்கும் தோப்புவிளையைச் சேர்ந்த கதிரேசன் என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
அப்போது வரதட்சணையாக ரூ.ஒன்றரை லட்சம் ரொக்கமும், 51 பவுன் நகையும் மற்றும் சீர்வரிசை பொருட்களும் கொடுக்கப்பட்டன.
கதிரேசன் கண்டன் விளையில் உள்ள ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார். திருமணம் முடிந்த பின்பு கதிரேசன் மனைவி தேவிகாவிடம் பெற்றோர் வீட்டிற்கு சென்று மேலும் கூடுதலாக ரூ.50 ஆயிரம் வரதட்சணை வாங்கி வரும்படி கூறினார். இதற்கு தேவிகா மறுத்ததால் கதிரேசனும் அவரது குடும்பத்தாரும் தேவிகாவை கொடுமைப்படுத்தினர்.
இதைக் கேட்டு மனம் உடைந்த தேவிகாவின் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணையைத் தருவதாக சமாதானப்படுத்தினர்.
இதையடுத்து தேவிகாவின் கணவர் வீட்டார் சாந்தமடைந்தனர். அமைதி நிலவியது. இந்த நிலையில் தேவிகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.
கடந்த 21-ந்தேதி தான் தேவிகாவின் பெற்றோர் அவரை கணவன் வீட்டில் விட்டு சென்றனர். தேவிகா புகுந்த வீட்டிற்கு போவதற்கு முன்பே அவரது பெற்றோர் ரூ.50 ஆயிரம் வரதட்சணை பாக்கியையும் செலுத்தி விட்டனர்.
இந்த நிலையில் தேவிகாவிடம் அவரது கணவர் கதிரேசன் மீண்டும் தகராறு செய்தார். வரதட்சணை பணத்தை அவரது தந்தை 6 மாதங்கள் கழித்து தந்திருப்பதாகவும், அந்த 6 மாதத்திற்கும் வட்டியாக ரூ.6 ஆயிரம் கூடுதல் பணம் வேண்டும் என்றும் கேட்டு சண்டை போட்டுள்ளார்.
இதைக் கேட்டு வேதனை அடைந்த தேவகா, கணவருடன் வாக்குவாதத்தி்ல ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் தேவிகாவின் பெற்றோருக்கு அவரது கணவர் வீட்டிலிருந்து போன் வந்தது.
தேவிகா தனது குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ந்த பெற்றோர் தேவிகா வீட்டுக்கு ஓடினர்.
அங்கு கட்டிலில் உடம்பு முற்றிலும் கருகிப் போன நிலையில் தேவிகாவும், அவரது குழந்தையும் இருந்தனர். எலும்பும், மண்டை ஓடும் மட்டுமே இருந்தது. இரு உடல்களும் முற்றிலும் கருகிப் போய் விட்டன.
இரணியல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விசாரணையில், இருவரும் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டது போலத் தெரியவில்லை என்று போலீஸார் நம்பினர்.
தேவிகாவுக்கு அருகில் குழந்தையின் எரிந்து போன உடல் இருந்தது. அந்த அறையில் வேறு எங்குமே தீப்பிடித்த அறிகுறியே இல்லை.
எனவே இருவரையும் கொலை செய்து விட்டு பிணங்களைத் தீவைத்துக் கொளுத்தியிருப்பார்கள் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
இதையடுத்து தேவிகாவின் கணவர் கதிரேசன், தந்தை கந்தசாமி உள்ளிட்ட 3 பேரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.