பள்ளி வேன்-ஆட்டோ டிரைவர்களுக்கு எச்சரிக்கை
சென்னை: ஆட்டோ மற்றும் வேன்களில் அளவுக்கு அதிகமான குழந்தைகளை ஏற்றிச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், மீறும் ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆட்டோ, டெம்போ வேன்களில் அதிக ஆட்களை ஏற்றி செல்வதை சென்னை மாநகரில் காண முடிகிறது. குறிப்பாக பள்ளிகளுக்கு இந்த வண்டிகளில் மாணவர்களை அடைத்துக் கொண்டு செல்வது பெற்றோர்களுக்கு பெரும் கவலையை அளித்துள்ளது. விபத்துக்கள் ஏற்படுவதற்கும் இது வழி வகுக்கிறது.
ஆட்டோக்களில் 5 பேரும், வேன்களில் 18 பேரும் ஏற்றி செல்ல மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆயினும், இந்த விதிமுறை பெரும்பாலும் பின்பற்றபடுவதில்லை. மதிப்புமிக்க மனித உயிர்களை குறிப்பாக குழந்தைகளை காப்பாற்றுவதற்காக இந்த பழக்கத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவது மிகவும் அவசியம்.
எனவே ஆட்டோ மற்றும் வேன் ஓட்டுநர்கள் தங்கள் வண்டிகளில் அளவிற்கு அதிகமாக ஆட்களை ஏற்றுவதை தவிர்க்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள்.
குறிப்பிட்ட அளவு நபர்களை ஏற்ற வேண்டும் என்ற மோட்டார் வாகன விதிகளை அவர்கள் தவறாது கடைபிடிக்க வேண்டும். விதிகளை மீறுவோர் மீது ஜூலை 1ம் தேதி முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த விஷயத்தில் அனைத்து பள்ளி முதல்வர்களும், பெற்றோர்களும் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
பொது இடத்தில் புகை பிடித்தால்..
இந் நிலையில் இன்று உலக போதை எதிர்ப்பு தினத்தையொட்டி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சென்னையில் மனித சங்கிலி நடத்தினர். மாணவ- மாணவிகள் பங்கேற்ற இந்த மனித சங்கிலி மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி சிலையில் இருந்து சாந்தோம் சர்ச் வரை நடந்தது.
இதைத் தொடங்கி வைத்த டி.ஜி.பி. ஜெயின் நிருபர்களிடம் பேசுகையில்,
பொது இடங்களில் புகை பிடிப்பதை தடுப்பதற்கான சட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது. இது கடுமையாக அமலாக்கப்படும். பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.