தமிழக சிறைகளில் ஜாமர் கருவிகள்-ரூ. 400 கோடியில் நவீனமயமாக்கல்
சென்னை: தமிழக சிறைச்சாலைகளை நவீனமயமாக்க ரூ. 400 கோடியில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதுதவிர சிறைச்சாலைகளில் கைதிகள் செல்போன்களில் பேசுவதைத் தடுக்க ஜாமர் கருவிகளும் பொருத்தப்படவுள்ளன.
இதுகுறித்து சிறைத்துறை தரப்பில் கூறப்படுவதாவது..
மத்திய அரசிடம் இதுதொடர்பான திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ரூ.400 கோடி பணம் ஒதுக்கப்பட்டவுடன் உடனடியாக நவீனப்படுத்தும் பணி தொடங்கப்படும்.
பழைய சிறைகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும், புதுப்பிக்கப்படும். சிறைச்சாலைகளில் பாத்ரூம் வசதி நன்றாக அமைக்கப்படும்.
அனைத்து சிறைகளிலும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு சென்னையில் உள்ள சிறைத்துறை தலைமை அலுவலகத்தோடு இணைக்கப்படும். வீடியோ கான்பரன்சிங் வசதி விரிவுப்படுத்தப்படும்.
சிறைகளில் உள்ள சமையல் கூடங்களும் நவீனப்படுத்தப்படும். தற்போது கேஸ் அடுப்புகள் மூலம் சமையல் செய்யப்படுகிறது. இனிமேல் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரித்து அதன்மூலம் சமையல் செய்வதற்கும், மற்ற மாநிலங்களில் உள்ளதைபோல் ஏற்பாடுகள் செய்யப்படும்.
சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்தி சிறைகளில் விளக்கு வசதி செய்யப்படும். இதற்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது.
கஞ்சா கடத்தலைத் தடுக்க நாய்ப் படை..
சிறைகளுக்குள் கஞ்சா கடத்தலை தடுக்க மோப்ப நாய்களை பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். இதற்காக மோப்ப நாய்கள் வாங்கப்படும்.
சிறை ஊழியர்களுக்கு மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையினரின் உதவியோடு நவீன காவல் பயிற்சி அளிக்கப்படும்.
ஜாமர் - ஸ்கேனர்..
செல்போன் கடத்தலை தடுக்க அனைத்து மத்திய ஜெயில்களிலும் நவீன ஜாமர் கருவி பொருத்தவும் திட்டமிட்டுள்ளோம். பார்வையாளர்களை சோதனை செய்ய ஸ்கேனர் கருவியும் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகளில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களைக் கருத்தில் கொண்டு சிறைச்சாலைகளில் பாதுகாப்பை அதிகரிக்கவும், கைதிகளிடையே செல்போன் புழக்கத்தை அடியோடு குறைக்கவும் இந்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது.