உசிலம்பட்டியில் 5 ஜம்பொன் சிலைகள் கொள்ளை
மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கோவிலில் இருந்த கோடிக் கணக்கான விலை மதிப்பு கொண்ட 5 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன. போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.
உசிலம்பட்டி பகுதியில் சேடப்பட்டி ஒன்றியம் சாத்தூருக்கு அடுத்த பழையூரில் கள்ளழகர் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு கொண்ட அழகர், பாமா, ருக்மணி, மீனாட்சி, சொக்கர் ஆகியோருக்கு ஐம்பொன் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஐந்து ஐம்பொன் சிலைகளில் கள்ளழகர் மற்றும் மீனாட்சியின் சிலைகள் பாதுகாப்பு காரணம் கருதி புதுப்பட்டியில் உள்ள மீனாட்சி கோயிலில் தான் வைக்கப்படும். அழகர் ஆற்றில் இறங்கும் வைபோவத்தின் போது மட்டும் தான் இந்த சிலைகள் இப்பகுதிக்கு கொண்டு வரப்படும். ஆனால், சமீபகாலமாக இந்த இரு சிலைகளும் இங்கு தான் இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல் வேலைகளை முடித்துவிட்டு பழையூர் கள்ளழகர் கோவில் பூசாரி நடையை சாத்திவிட்டு வீடு திரும்பினர். மறுநாள் காலையில் நடையை திறந்தபோது அவருக்கு பெரும் அதிர்ச்சி. கோவிலில் இருந்த ஐந்து ஐம்பொன் சிலைகளும் ஒட்டுமொத்தமாக கொள்ளை போனது.
இது குறித்து அவர் போலீசில் புகார் செய்தார். சாத்தூர் மற்றும் பேரையூர் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜம்பொன் சிலைகளை திருடிய மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.