குற்றாலம்-சுற்றுலா பயணிகளிடம் மாணவிகள் சர்வே
குற்றாலம்: குற்றாலத்தின் வனப்பை பாதுகாப்பது, சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக மாவட்ட கலெக்டரின் உத்தரவின் படி கல்லூரி மாணவிகள் சர்வே ஒன்றை எடுத்துள்ளனர்.
நெல்லை மாவட்ட கலெக்டராக ஜெயராமன் பதவியேற்ற நாளில் இருந்து குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்து வருகிறார்.
சுற்றுலா பயணிகளின் வசதிகளை மேம்படுத்த தேவையான ஆலோசனைகளை பெற கல்லூரி மாணவிகளை கொண்டு சர்வே ஒன்றை எடுக்க அப்பகுதி வருவாய் துறையினருக்கு கலெக்டர் ஜெயராமன் உத்தரவிட்டார்.
இதையடுத்து குற்றாலம் பராசக்தி கல்லூரி பொருளாதாரத்துறை மாணவிகள் சுமார் 150 பேர் துறை தலைவர் சசிகலா, துணை தலைவர் தமிழ் மணி, எக்கோ கிளப் செயலாளர் பேராசிரியை கயற்கண்ணி, பேராசிரியைகள் பார்வதி, மதுமதி ஆகியோர் மேற்பார்வையில் மெயினருவி, பூங்கா உள்ளிட்ட பல இடங்களில் சுற்றுலா பயணிகளிடம் சர்வே நடத்தினர்.
அவர்கள் குற்றாலத்தில் சுகாதாரம் எப்படி இருக்கிறது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து, தங்குமிடம், பாதுகாப்பு வசதி, ஹோட்டல்களில் உணவு கட்டணம் ஆகியவை திருப்தி அளிக்கிறதா, பொது இடங்களில் மது அருந்துவதால் ஏற்படும் இடையூறுகள் குறித்தும் சுற்றுலா பயணிகளிடம் சர்வே எடுத்தனர்.
வாகன கட்டண வசூல், திருட்டு பயம், பொழுதுபோக்கு அம்சங்கள், சாலை வசதிகள், இரவு நேரத்தில் குளிப்பதற்கு செய்யப்பட்டுள்ள வசதிகள், படகு துறை வசதி, குற்றாலத்தின் பாதுகாக்க தேவையான அலோசனைகள் உள்ளிட்ட கேள்விகளையும் கேட்டு சர்வே செய்தனர்.
இந்த சர்வே முறையாக தொகுக்கப்பட்ட விரைவில் வருவாய் துறையினரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
அருவிகளில் மீண்டும் தண்ணீர்...
குற்றாலத்தில் இம்முறை சீசன் கண்ணாமூச்சி ஆடி வருகிறது. கடந்த சில தினங்களாக அருவிகளில் தண்ணீர் ஓர் ஓரமாக விழுந்து கொண்டிருந்தது. வெகு தூரத்தில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் வேறு வழியில்லாமல் நீண்ட வரிசையில் நின்று உடலை நனைத்து சென்றனர்.
இந்நிலையில் கடந்த நேற்று முன்தினம் குற்றால மலைப்பகுதியில் நல்ல மழை பெய்தது. இதையடுத்து நேற்று அங்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால் பெரியருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் கொட்டுகிறது. பெரியருவியில் நீர் ஆர்ச்சை தாண்டி விழுகிறது.