மின்சார ரயிலை கடத்தியவர் ஆந்திரா நபர் அல்ல!
சென்னை: சென்னையில் மின்சார ரயிலைக் கடத்தி சரக்கு ரயிலுடன் மோத விட்ட சம்பவத்தில் ரயிலைக் கடத்தியதாக சந்தேகப்பட்ட நபர் ஆந்திராவைச் சேர்ந்த நாகராஜ் அல்ல என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் கடந்த ஏப்ரல் 29ம் தேதியன்று சென்டிரல் ரயில் நிலையத்தில் தயாராக நின்று கொண்டிருந்த ரயிலை ஒரு மர்ம நபர் கடத்திச் சென்று வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலுடன் மோத விட்டான்.
இதில் 7 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 6 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு விட்டன. அடையாளம் காணப்படாத 7வது நபர்தான் ரயிலைக் கடத்தியிருக்கலாம் என சிபிசிஐடி போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
அந்த மர்ம நபரின் கையில் நாகராஜ் என்று தெலுங்கில் பச்சை குத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்று ஊகிக்கப்பட்டது.
விசாரணையில் அவர் தடாவைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நாகராஜின் மனைவி மற்றும் தாயார், பிள்ளைகள் அழைத்து வரப்பட்டு உடல் காட்டப்பட்டது.
அப்போது நாகராஜின் தாயார் முதலில், தனது மகனைப் போலவே உள்ளதாக தெரிவித்தார். ஆனால் பின்னர் இல்லை என்று கூறி விட்டார். அதேபோல அவரது மனைவியும் இது தனது கணவரைப் போல இல்லை என்று கூறி விட்டார்.
இதையடுத்து டிஎன்ஏ சோதனைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் சென்னை தடயவியல் ஆய்வகத்திலும் சோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் தடயவியல் சோதனை முடிவு வந்து விட்டது. அதில், நாகராஜின் உடல் அல்ல என்று தெரிய வந்துள்ளதாம்.
இதையடுத்து இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நாகராஜ் இல்லையென்றால் ரயிலைக் கடத்திய நபர் யார் என்பது யார், அடையாளம் காணப்படாமல் உள்ள ஏழாவது நபர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.