இன்னும் சுட்டெரிக்கும் வெயில்-என்ன காரணம்?
கோடை காலத்தின் ஆரம்பம் மற்றும் முடிவில் இருந்ததை விட தற்போது வெயில் மிகக் கடுமையாக உள்ளது. பகல் முழுவதும் வெயில் சுட்டெரிக்கிறது. அதேசமயம், மாலையில் பலத்த காற்றும், அவ்வப்போது லேசான மழையும் காணப்படுகிறது.
இந்த இயற்கையின் முரண்பாடான நிலை காரணமாக மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
பகல் முழுவதும் வெயில் கத்திரி வெயிலைப் போல மிகக் கடுமையாக இருப்பதாலும், அனல் காற்றும் வீசுவதாலும் வீட்டுக்குள்ளும் இருக்க முடியவில்லை. வெளியிலும் தலை காட்ட முடியவில்லை.
தென் மேற்குப் பருவ மழையும் எதிர்பார்த்தது போல இல்லாமல் ஏமாற்றி வருகிறது.
ஏன் இந்த முரண்பாடான நிலை, வெயில் ஏன் இன்னும் சுட்டெரிக்கிறது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் விளக்குகையில், கடல் காற்று தாமதமாக வீசுவதே இதற்கு முக்கிய காரணம். வழக்கமாக காலை பத்தரை மணிக்கு காற்று வீசத் தொடங்கும். அதுதான் இயல்பான நிலை.
ஆனால் தற்போது மாலை 3 மணிக்குப் பிறகுதான் கடல் காற்று வீசுகிறது. எனவேதான் வெயில் கடுமையாக உள்ளதற்கும், அனல் காற்று வீசுவதற்கும் காரணம்.
கடல் காற்றுக்குப் பதில் தரைக்காற்றுதான் தற்போது அதிகம் வீசுகிறது. எனவேதான் வெப்பம் அதிகமாக உள்ளது.
தென் மேற்குப் பருவமழை தற்போது வலுவிழந்துள்ளது. இதுவும் வெப்ப நிலை அதிகரிக்க இன்னொரு காரணம். தற்போது கேரளாவில் லேசான மழைதான் உள்ளது. அங்கு பலத்த மழை பெய்தால், அருகில் உள்ள தேனி, கோவை, கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வானிலை மாறும், மழையும் கிடைக்கும்.
தற்போதைய நிலவரப்படி பகல் நேரங்களில் சராசரியாக 104 முதல் 105 டிகிரி வரை வெயில் அடிக்கும். இரவு நேரங்களில் ஆங்காங்கே மழை பெய்யும். சூறைக் காற்றும் சில இடங்களில் காணப்படும் என்கிறார்.
சதத்திலிருந்து இறங்காத வெயில்..
நேற்றும் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் வெயில் கொளுத்தியது.
சென்னையில் சராசரியாக 105 டிகிரி வெயில் பதிவானது. அதேபோல மதுரை, புதுச்சேரி, நாகை, வேலூர், திருச்சி, கடலூர் ஆகிய நகரங்களில் 100 டிகிரியைத் தாண்டி வெயில் இருந்தது.
தூத்துக்குடி, நெல்லை, சேலம், கோவை, குமரி மாவட்டங்களிலும் வெயில் ஓரளவு கொளு்தியது.
சென்னை புறநகர்ப் பகுதிகளில் நேற்று பகலில் ஒரு பக்கம் வெயில் கொளுத்திக் கொண்டிருக்க மறுபக்கம் பலத்த காற்றும் வீசியது. மாலையில் சில இடங்களில் லேசான மழை காணப்பட்டது.