சங்கராச்சாரியார் ஜெயேந்திரருக்கு ஆக. 7ல் பிறந்த நாள் - சதுர்மாஸ்ய விரதம் தொடக்கம்
காஞ்சிபுரம்: காஞ்சி சங்கர மடம் சங்கராச்சாரியார் ஜெயேந்திரருக்கு ஆகஸ்ட் 7ம் தேதி 75வது பிறந்த நாள் வருகிறது. இதையொட்டி ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் சதுர்மாஸ்ய விரதத்தை இன்று தொடங்கினர்.
செப்டம்பர் 4-ம் தேதி வரை நடைபெறும் இவ்விரதத்தை ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் ஆகியோர் அனுசரிப்பார்கள்.
வியாச பூஜையுடன் விரதம் தொடங்கியது. விரத காலத்தில் அத்வைத வேதாந்த சதஸ், வேதவித்வத் சதஸ், வேதபாராயணம் வேதபாஷ்ய சதஸ், அக்னி ஹோத்ரம், பஞ்சங்க சதஸ் நடைபெறும். மாலை வேளையில் சிறப்பு இன்னிசை கச்சேரிகள், உபன்யாசங்கள் நடக்கின்றன.
10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை அக்னி ஹோத்ர சதஸும், 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை பஞ்சங்க சதஸும் நடக்கின்றன.
ஆகஸ்ட் 7-ம் தேதி ஜயேந்திரர் ஜெயந்தி விழாவும், 13-ம் தேதி ஜன்மாஷ்டமியும், 23-ம் தேதி விநாயக சதுர்த்தியும், 28-ம் தேதி சாஸ்த்ர பரிஷா, வேதபாஷ்ய பரிஷா, வித்வத் சதஸ், அத்வைத வேதாந்த சதஸும், செப்டம்பர் 4-ம் தேதி விஸ்வரூப தரிசனமும் நடைபெறும்.
இம்மாதம் 9-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை மாலை வேளைகளில் வி.ராதாகிருஷ்ண சாஸ்திரி, ஸ்ரீ பகவத் பாத சரிதம் தொடர் உபன்யாசம் நிகழ்த்துகிறார். இதற்கான ஏற்பாடுகளை சங்கர மடம் நிர்வாகிகள் செய்துள்ளனர்.