சென்னையில் ஆட்டோ ஸ்டிரைக்-மக்கள் திணறல்
முக்கிய தொழிற்சங்கங்களான சிஐடியு, ஏஐடியுசி., குட்வில், விடுதலை சிறுத்தைகள், பாமகவின் பாட்டாளி தொழிற்சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் சென்னையில் பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் மக்கள் பெரும் சிரத்துக்கு ஆளாகினர்.
அதே நேரத்தில் எல்பிஎப், ஐஎன்டியுசி சங்கங்களைச் சேர்ந்த ஓட்டுனர்கள் ஆட்டோக்களை இயக்கினாலும் தங்களது கட்டணத்தை 3 மடங்கு வரை உயர்த்தி மக்களுக்கு மேலும் டென்சன் கொடுத்து வருகின்றனர்.
ஷேர் ஆட்டோக்கள், பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களும் ஓடாததால் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு மானிய விலையில் மீனவர்களுக்கு டீசல் வழங்குவது போல ஆட்டோக்களுக்கும் பெட்ரோல், டீசல், கேஸை மானிய விலையில் வழங்க வேண்டும் என்று கோரும் ஆட்டோ ஓட்டுனர்கள்,
மீட்டர் கட்டணத்தை கிலோ மீட்டருக்கு ரூ.20 ஆக உயர்த்த வேண்டும் என்று கோருகின்றனர்.
சென்னையில் சுமார் 65,000 ஆட்டோக்கள் உள்ளன. இதில் பெரும்பாலான ஆட்டோக்கள் இன்று ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சாலைகளில் போக்குவரத்தும் சற்று குறைவாகவே உள்ளது.