காங். போட்டா போட்டி-இப்பவே கண்ண கட்டுதே!
சென்னை: இடைத் தேர்தலில் போட்டியிட சீட் பிடிக்க காங்கிரசார் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
தொண்டாமுத்தூரில் 2006ம் ஆண்டில் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் போட்டியிட்டு தோற்றார். அங்கு மதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற மு.கண்ணப்பன் இப்போது திமுகவில் இணைந்து மீண்டும் அங்கு போட்டியிட திமுக தலைமையிடம் விருப்ப மனு தந்துள்ளார். அங்கு திமுக போட்டியிட்டால் வேறு தொகுதியை காங்கிரசுக்கு விட்டுத் தர வேண்டி வரும்.
அப்படி ஒரு நிலை வந்தால் கம்பம் தொகுதியை தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கேட்பதாகத் தெரிகிறது. அந்தத் தொகுதி கிடைத்தால் தனது ஆதரவாளரான சுந்தரவடிவேலுவை நிறுத்த தங்கபாலு நினைக்கிறார்.
கடந்த முறை விருதுநகரில் எம்.பி.தேர்தலில் போட்டியிட வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பின்னர் மாற்றப்பட்டவர் தான் இந்த சுந்தர வடிவேலு.
ஆனால், தொண்டாமுததூரே வேண்டும் என்று கருதும் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் மீண்டும் அங்கு போட்டியிட விரும்புகிறார்.
இந் நிலையில் நிலையில் இந்தத் தொகுதியை தனது ஆதரவாளரான எம்.என்.கந்தசாமிக்குப் பெற்றுத் தர மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் தீவிரம் காட்டி வருகிறார்.
மேலும் தொண்டாமுத்தூர் தொகுதியைக் கைப்பற்ற மயூரா ஜெயக்குமார் டெல்லியில் முகாமிட்டுள்ளதால் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியமும் அங்கேயே டேரா போட்டு சீட் பிடிக்க தீவிரமாக முயன்று வருகிறார்.
அதே போல் இளையான்குடி தொகுதியில் போட்டியிட கார்த்தி சிதம்பரம் விரும்புகிறாராம்.
இதற்கிடையே மத்திய கப்பல்துறை அமைச்சர் வாசன் தரப்பு தொண்டாமுத்தூருக்குப் பதில் பர்கூரைக் கேட்கிறதாம். அங்கு தனது ஆதரவாளரை நிறுத்த விரும்புகிறாராம் வாசன்.
இது குறித்து தமிழக காங்கிரஸ் பொருளாளர் சுதர்சனம் கூறுகையில்,
கடந்த தேர்தலில் ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூர் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டதால் மீண்டும் அதே தொகுதியில் பேட்டியிட திமுகவுடன் பேசினோம். இன்னும் இறுதி முடிவு எடுக்கபடவில்லை.
அதே நேரத்தில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி உறுதியாகிவிட்டது. ஆனால், தொண்டாமுத்தூர் தொகுதியா அல்லது வேறு தொகுதியா என்பது குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது. எப்படியும் காங்கிரஸ் 2 தொகுதியில் போட்டியிடுவது உறுதி என்றார்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட மறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ செல்வராஜின் மனைவி நளினியே சீட் கேட்கிறார்.
யார் என்ன சொன்னாலும் தொண்டாமுத்தூரை தானே வைத்துக் கொண்டு அங்கு கண்ணப்பனை போட்டியிடச் செய்யவும், கம்பம் தொகுதியை மதிமுகவிருந்து தாவி வந்த ராமகிருஷ்ணனுக்கே மீண்டும் தரவும் திமுக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
காங்கிரசுக்கு இளையாங்குடி, ஸ்ரீவைகுண்டம் தரப்படலாம் என்கிறார்கள்.
இப்பவே கண்ண கட்டுதா...!