ஸ்வைன்: தெரிந்தும் பள்ளிக்கு சென்ற மாணவர்-வீட்டு சிகிச்சைக்கு தடை
சென்னை: தனக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரிந்தும் தனியறையில் சிகிச்சை பெறாமல் டாமி ப்ளூ மாத்திரை எடுத்து கொண்டு கோயம்புத்தூர் மாணவர் ஒருவர் பள்ளிக்கு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து வீடுகளில் சிகிச்சை பெற தமிழக அரசு தடை விதித்துள்ளது.
கடந்த வாரம் கோயம்புத்தூர் மாவட்டம் கல்லாறு பகுதியில் உள்ள சச்சிதானந்தா ஜோதி நிகேதன் என்ற பள்ளியை சேர்ந்த 18 வயது மாணவர் அதிக காய்ச்சல், மூக்கு ஒழுகல், தொண்டை வலி போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் அந்த பள்ளியில் படித்த பல மாணவர்களுக்கும் இதே போன்ற அறிகுறி இருந்துள்ளது. இந்நிலையில் சோதனையில் அவர்கள் அனைவருக்கும் பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து தான் தமிழக அரசு வீட்டு சிகிச்சைக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து சுகாதாரதுறை இயக்குனர் டாக்டர் எஸ்.இளங்கோ கூறுகையில்,
ஒரு பள்ளியில் இப்படி பல மாணவர்களுக்கு ஒரே சமயத்தில் பன்றி காய்ச்சல் நோய் தொற்றுவது ஆபூர்வமானது. இந்த நோய்க்கான காரணத்தை அறிந்த போது நாங்கள் அதிர்ச்சியடைந்துவிட்டோம்.
பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் டாமிப்ளூ மாத்திரைகளை எடுத்து கொண்டு தினமும் பள்ளிக்கு வந்திருப்பது தெரியவந்துள்ளது. அவன்மூலம் தான் சத்தமில்லாமல் இந்த நோய் பலருக்கும் பரவியுள்ளது.
இதையடுத்து மாநில சுகாதார துறையினரிடம் இருந்து இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விவகரங்கள் சேகரிக்கப்பட்டது. தமிழகத்தி்ல மொத்தம் பாதிக்கப்பட்ட 1,606 பேரில் 160 பேர் வீட்டில் இருந்து சிகிச்சை பெறுவது தெரியவந்தது.
அவர்களில் சிலர் வீட்டில் தனியறையில் இருந்து சிகிச்சை பெறுவதை முறையாக கடைபிடிப்பதில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து இதை தடை செய்துள்ளோம். எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை.
மேலும், நோயாளிகளை பார்க்க வரும் விருந்தினர்களை யாரும் தடுப்பதில்லை. இதனால் அவர்களும் வந்த இடத்தில் நோயை வாங்கி சென்றுவிடுகின்றனர் என்றார்.
கடைகளில் தனி நபருக்கு டாமி ப்ளூ கிடையாது...
தமிழக சுகாதார துறை செயலர் சுப்புராஜ் கூறுகையில்,
அதேநேரத்தில் சுகாதார துறையினர் டாமிப்ளூ மாத்திரைகளை தனி நபர்களுக்கு கொடுக்க கூடாது என மருந்து கடைகளை அறிவுறுத்தியுள்ளனர். டாக்டர்களின் சீட்டுக்கு மட்டுமே இந்த மருந்துகளை கொடுக்க வேண்டும்.
இளம் வயதினரிடையே இந்த நோய் வேகமாக பரவி வருகிறது. தற்போது வீட்டு சிகிச்சைக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து அரசு மருத்துவமனைகளில் சேர அவர்கள் தூண்டிவிடப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இந்த நோய்க்கு பலியான ஐந்து போரும் தாமதமாக சிகிச்சை எடுத்து கொண்டவர்கள் தான் என்றார்.