மாலத்தீவு-கடலுக்கடியில் நடந்த கேபினட் கூட்டம்
உலகில் கடல் மட்டத்துக்கு கீழ் உள்ள முக்கியமான தீவு மாலத்தீவு. புவி வெப்பமயமாதால் துருவங்களில் பனிப் பாறைகள் உருகி வருகின்றன. இதனால் கடல் மட்டம் உயர்ந்து வருகிறது.
இதே நிலை தொடர்ந்தால் கடல் மட்டம் 18 செ.மீ. முதல் 60 செ.மீ. வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட நிலையில் 2100ம் ஆண்டில் மாலத்தீவே நீருக்கடியில் மூழ்கிவிடும் அபாயம் நிலவுகிறது.
இந்த அபாயத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில் கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தியது அந் நாட்டு அரசு.
உலகிலேயே அமைச்சரவைக் கூட்டம் கடலுக்கு அடியில் நடத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
மாலத்தீவில் உள்ள கிர்பியூஷி தீவில் அந்நாட்டு அதிபர் முகமது நஷீத் தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது. 'ஸ்கூபா டைவ்' நீச்சல் வீரர்கள் உடையில் அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இதற்காக இவர்களுக்கு கடந்த பல மாதங்களாக பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
25 நிமிடம் நடந்த இக் கூட்டத்தில் புவி வெப்பம் அதிகரித்து வருவதால் மாலத்தீவு மட்டுமல்லாது இந்த உலகமே எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
புவி வெப்பமாவதைத் தடுக்க உலக நாடுகளின் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக இக்கூட்டத்தில் பிரகடனம் ஒன்றும் வெளியிடப்பட்டது.
இந்தப் பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபை சார்பில் வெப்பநிலை அதிகரிப்பு குறித்து கோபன்ஹேகனில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மாலத்தீவு கடலில் மூழ்கினால் மக்களை வேறு நாடுகளில் குடியமர்த்துவது உள்ளிட்ட திட்டங்களை அந் நாடு இப்போதே தயார் செய்து வருவது குறிப்படத்தக்கது.