பெரியாறு அணை: தமிழக மக்களை ஏமாற்றுகிறார் கருணாநிதி - சாமி
சென்னை: முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக மக்களை முதல்வர் கருணாநிதி ஏமாற்றுகிறார் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சுப்பிரமணிய சாமி இதுதொடர்பாக கூறியதாவது:
முல்லைப் பெரியாறு அணை வழக்கு விசாரணையை அரசியல் சாசன பெஞ்சுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்ததையடுத்து, இந்த பிரச்னையில் யாரிடம் முறையிடுவது என்றே தெரியவில்லை என முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார்.
அவர் தமிழக மக்களை ஏமாற்றுகிறார். அணையின் நீர்மட்டத்தை உயர்த்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த உடனே அணையின் நீர் மட்டத்தை உயர்த்த அதிகாரிகளுக்கு உத்தரவிட அவர் தவறிவிட்டார்.
மேலும் வழக்கு விசாரணையின்போது, அரசியல் சாசன பெஞ்சுக்கு பரிந்துரைப்பதாக நீதிபதிகள் கூறியபோது தமிழக அரசின் வழக்கறிஞரும் அதனை ஏற்றுக்கொண்டிருக்கிறார். இரு மாநில ஒப்புதலுடன் அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழக அரசின் வழக்கறிஞர் வலுவாக எதிர்க்கவில்லை. எனவே இந்த விஷயத்தில் தமிழக மக்களுக்கு முதல்வர் கருணாநிதி துரோகம் செய்து விட்டார்.
ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக பிரதமருக்கு எல்லாம் தெரியும். எனவே தான் மத்திய அமைச்சர் ராசாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர், பட்டும் படாமல் விளக்கம் கேட்டிருக்கிறார்.
ராசா மீது வழக்குத் தொடர பிரதமரிடம் அனுமதி கேட்டிருக்கி றேன். அதற்கான பதில் வந்தபிறகு வழக்குத் தொடர்வேன். ஜார்க்கண்ட்டில் ஊழலில் சிக்கியிருக்கும் மதுகோடா பின்னால் சோனியா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இருக்கின்றனர்.
காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக ஹூரியத் தலைவரோடு மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ரகசிய பேச்சு நடத்தியிருக்கிறார்.
இப்போது இந்த பிரச்சனையில் சீனாவுக்கும் அக்கறை இருக்கிறது என ஹூரியத் தலைவர் கூறியுள்ளார். இதன்மூலம் பிரச்சனையை சர்வதேச மயமாக்கி இருக்கிறார். மத்திய அமைச்சர் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.
எந்த தீவிரவாத மற்றும் நக்சல் இயக்கங்களோடும் பேச்சு நடத்தக் கூடாது. ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தபிறகே பேச்சு நடத்த வேண்டும்.
தற்போதைய விலைவாசி உயர்வுக்கு பதுக்கல் மற்றும் செயற்கை பற்றாக்குறையே காரணம். மத்திய அரசு வழங்கிய பொருளாதார சலுகைகளைக் கொண்டு பதுக்கலில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைப்பது தொடர்பாக 2001ல் முதல்வராக இருந்த பன்னீர் செல்வம் அனுப்பிய கடிதத்தை தற்போதைய முதல்வர் திரும்ப பெற்று தேவர் பெயர் சூட்ட வழி வகுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம்.
ஆப்கானிஸ்தானில் கர்சாய் அரசுக்கு ஆதரவாக இந்தியா துருப்புகளை அனுப்பி வைக்க வேண்டும். இதன் மூலம் பாகிஸ்தான் செயலுக்கு பதிலடி கொடுக்க முடியும் என்று சுவாமி கூறினார்.