பெரியாறு அணை வழக்கு ஒருங்கிணைப்பாளராக பொன்முடி நியமனம்
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகளுக்கிடையே முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருந்து வருகிறது. இவ்வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்கள் தற்போது ஐந்து உச்சநீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட அரசியலமைப்பு அமர்வினை அமைத்துள்ளார்கள்.
இவ்வழக்கு தொடர்பாகவும் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் பிரச்சினைகள் குறித்தும் முதல்வர் கருணாநிதியின் அறிவுரையின் பேரில், சட்ட வல்லுநர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் ஆகியோருடன் தொடர்பு கொண்டு ஒருங்கிணைத்தல், இது தொடர்பான நேர்வுகளை மேற்பார்வையிட்டு தொடர் நடவடிக்கை எடுத்தல், மத்திய அரசுடனும் கேரள மற்றும் பிற தொடர்புடைய மாநில அரசுகளுடனும் இப்பிரச்சனைகள் குறித்து தொடர்பு கொள்ளுதல் ஆகிய பணிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி மேற்கொள்வார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.