பெரம்பூர் ரயில் நிலையத்தில் பெரும் நெரிசல்!
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் நடப்பதால் 9 ரயில்கள் பெரம்பூர் ரயில் நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டன. இதனால் பெரம்பூர் ரயில் நிலையத்தில் பெரும் நெரிசல் ஏற்பட்டது.
மேலும் சென்னையில் இன்று மட்டும் 5 இடங்களில் மேம்பாலங்கள் சுரங்கப் பாதைகளை முதல்வர் கருணாநிதி திறப்பதால் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் விரிவாக்கப்பணி மற்றும் சிக்னல் அமைக்கும் பணி 4 கட்டமாக நடந்து வருகிறது. கடந்த 3, 8 ஆகிய தேதிகளில் 2 கட்டப்பணிகள் நடைபெற்றன.
இன்று 3-வது கட்டமாக பராமரிப்பு பணி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இதனால் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரும் ரயில்கள் பெரம்பூர், எழும்பூர் ரயில் நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
சென்ட்ரல்- அரக்கோணம் பயணிகள் ரயில் இன்று ரத்து செய்யப்பட்டது.
பெரம்பூர் ரயில் நிலையத்துக்கு 9 ரயில்கள் திருப்பி விடப்பட்டு அங்கிருந்தே புறப்பட்டு செல்கின்றன.
இதனால் சிறிய நிலையமான பெரம்பூரில் பெரிய அளவு நெரிசல் ஏற்பட்டு, பயணிகள் திக்குமுக்காடுகின்றனர்.
பயணிகளுக்கு போலீசார் முடிந்தவரை உதவி வருகின்றனர். பயணிகள் உடமைகளுடன் பத்திரமாக போய்ச் சேர வழிகாட்டுவதுடன், பஸ் நிற்கும் இடம் வரை அவர்களை அழைத்துச் சென்றும் உதவுகின்றனர்.
போக்குவரத்து மாற்றத்தால் பெரும் குழப்பம்!:
இதற்கிடையே, சென்னையில் செனடாப் சாலை மற்றும் டர்ன்புல்ஸ் சாலை சந்திப்பில் புதிய மேம்பாலம் வாகன பயன் பாட்டிற்கு திறந்து விட இருப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி புதிய மேம்பாலத்தின் வழியாக அனைத்து வாகனங்களும் செல்லலாம். கோட்டூர்புரம் மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் புதிய பாலம் வழியாக அண்ணாசாலைக்கு நேராக செல்லலாம். சைதாப்பேட்டைக்கு செல்ல சர்வீஸ் சாலையில் சென்று டர்ன்புல்ஸ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி சேமியர்ஸ் சாலை வழியாக நந்தனம் சந்திப்பை அடைந்து இடது புறமாக செல்லலாம். டி.டி.கே. சாலை செல்ல சர்வீஸ் சாலை சென்று வலது புறம் திரும்பி சேமியர்ஸ் சாலை வழியாக செல்லலாம்.
நந்தனம் சந்திப்பிலிருந்து வந்து அடையார் நோக்கி செல்லும் வாகனங்கள் டர்ன்புல்ஸ் பாயிண்ட்டில் வலதுபுறம் திரும்பி அடையார் சென்றடையலாம். அது போல டி.டி.கே. சாலை செல்ல நேராக சேமியர்ஸ் சாலை வழியாக செல்லலாம். நந்தனம் பகுதியில் இருந்து அண்ணாசாலை செல்பவர்கள் டர்ன்புல்ஸ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி அண்ணாசாலை செல்லலாம்.
டி.டி.கே. சாலை சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் அடையார் நோக்கி செல்ல டர்ன்புல்ஸ் பாயிண்ட்டை அடைந்து இடதுபுறம் திரும்பி சர்வீஸ் சாலை வழியாகவும், அண்ணா சாலைக்கு செல்ல டர்ன்புல்ஸ் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி செனடாப் சாலை வழியாகவும் சென்றடையலாம்.
டி.டி.கே. சாலை சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் டர்ன்புல்ஸ் சந்திப்பிலிருந்து நேராக நந்தனம் சந்திப்பு சென்று இடதுபுறம் திரும்பி செல்ல அனுமதிக்கப்படுகிறது. ஆனால் நேராக வெங்கட்நாராயணா சாலை நோக்கியோ அல்லது வலதுபுறம் திரும்பி அண்ணாசாலை நோக்கியோ செல்ல முன்பு இருந்த தடை தொடர்ந்து அமுலில் உள்ளது.
செனடாப் சாலை சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் டி.டி.கே. சாலை நோக்கி செல்ல டர்ன்புல்ஸ் பாயிண்ட்டை அடைந்து இடதுபுறம் திரும்பி செல்லலாம். அடையார் நோக்கி செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தின் வழியாக செல்லலாம்.
கிண்டியிலும் மாற்றம்:
நேரு மேம்பாலத்திலிருந்து கிண்டியை நோக்கி வரும் மாநகர பேருந்துகளாக 54, 18 மற்றும் 21ஜி ஆகிய வழித்தட பேருந்துகள் கிண்டி அண்ணாசாலையில் உள்ள நிறுத்தத்தில் நிற்பதற்கு பதிலாக கிண்டி தொழிற்பேட்டை சந்திப்பு மற்றும் ஆலந்தூர் சாலை சந்திப்பு (காவல் நிலையம் அருகே) நின்று பயணிகளை ஏற்றிச் செல்லும்.
இந்த போக்குவரத்து மாறுதல்களால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.