For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோதாவரி எரிவாயு மூலம் மின் தயாரிப்பு-தமிழகம் திட்டம்

By Staff
Google Oneindia Tamil News

கோவை: தமிழகத்தில் மின் தட்டுப்பாட்டைப் போக்க கிருஷ்ணா- கோதாவரி பகுதியில் கிடைக்கும் எரிவாயுவை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த எரிவாயுவைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் கோவையில் நடந்த தொழிலதிபர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின்,

இந்தியாவில் தொழில் துறையில் முக்கிய இடம் கோவைக்கு உண்டு. ஜவுளி, நூற்பு, வார்ப்படம், யந்திர உதிரிபாக உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கோவை முன்னிலையில் உள்ளது. அதே போன்று சமீபகாலமாக, மின்னணு தொழில் துறையிலும் வளர்ச்சி பெற்றுள்ளது.

தமிழகத்தில் ஐந்து மின்னணு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளன. இதன் மூலம் ரூ. 360 கோடி ரூபாய்க்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

டிட்கோ, எல்காட் நிறுவனங்கள் இணைந்து தகவல் தொழில்நுட்பத் துறையில் ரூ. 370 கோடியில் சிறப்பு பொருளாதார மண்டலத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதனால், பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் சூழல் உருவவாகும்.

கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலை பணிகள், ரூ. 178 கோடி மதிப்பில் 114 கி.மீ. தூரத்துக்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் 60 கி.மீ. தூரத்தில், ரூ. 94 கோடி செலவில் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள 54 கி.மீ. தூர பணிகள் நடந்து வருகின்றன.

கோவை-செங்கப்பள்ளி இடையே 82 கி.மீ. தூரத்திற்கு நான்கு வழி மற்றும் ஆறு வழிச்சாலை அமைக்கும் பணி, ரூ. 852 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது.

கோவை-மேட்டுப்பாளையம் என்.எச்.-67 சாலையை விரிவுபடுத்தும் பணிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் விரைவில் மேற்கொள்ளப்படும்.

மின் தட்டுப்பாட்டைப் போக்க கிருஷ்ணா, கோதாவரி பகுதியில் கிடைக்கும் எரிவாயுவை தமிழகத்துக்கு வழங்க தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கவும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்.

2007-08ம் ஆண்டில் 6,455 மில்லியன் யூனிட்டாக இருந்த நீர் மின்சார உற்பத்தி 2008-09 ல் 5,386 மில்லியன் யூனிட்டாக குறைந்துவிட்டது. மேலும் நெய்வேலி, கல்பாக்கம், கைகா அணுமின் நிலைய மின் உற்பத்தியும் குறைந்துள்ளது.

எண்ணூர் அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் திறனுள்ள மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி நிறைவடையும் தறுவாயில் உள்ளது.

இது போன்ற பல திட்டங்கள் மூலம் அடுத்த ஆண்டு தமிழகத்துக்கு கூடுதலாக 7,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.

கோவை விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் வந்து செல்ல வசதியாக, 9,760 அடி தூரத்துக்கு ஓடுதளம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதை சர்வதேச விமான நிலையமாக மாற்றி அமைக்கும் பணிகள், முழு வீச்சில் நடந்து வருகின்றன.

கோவையில் உலகத்தரம் வாய்ந்த மத்தியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட உள்ளது. அதற்காக, 500 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

பல்லடத்தில் ரூ. 1,500 கோடியில் காற்றாலை கியர் பாக்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது.

உள்ளூர் திட்டக் குழுமமாக செயல்பட்டு வரும் கோவை, விரைவில் பெருநகர வளர்ச்சி குழுமமாக மாற்றப்படும் என்றார் ஸ்டாலின்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X