மார்ச் 1ம் தேதி பிளஸ்டூ தேர்வு தொடக்கம்
சென்னை: பிளஸ்டூ பொதுத் தேர்வு திங்கள்கிழமை தொடங்குகிறது. தேர்வை சந்திக்க மாணவ, மாணவிகள் தயாராகி வருகின்றனர்.
மார்ச் 1ம் தேதி திங்கள்கிழமை தொடங்கி 22ம் தேதி தேர்வு முடிவடைகிறது. 5233 பள்ளிகளில் இருந்து மொத்தம் 6 லட்சத்து 89 ஆயிரத்து 687 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். இதில் 3,22,381 பேர் மாணவர்கள். மாணவிகள் 3,67,306 பேர்.
மாணவர்களை விட மாணவிகள் எண்ணிக்கை 44 ஆயிரத்து 925 அதிகம். கடந்த ஆண்டை விட இப்போது 17 ஆயிரத்து 481 மாணவர்களும், 24 ஆயிரத்து 574 மாணவிகளும் கூடுதலாக தேர்வு எழுதுகிறார்கள்.
தனித் தேர்வர்களாக 53 ஆயிரத்து 564 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.
தேர்வுக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 1809 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 137 தேர்வு மையங்களில் 48,730 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். புதுச்சேரியில் 30 தேர்வு மையங்களில் 12 ஆயிரத்து 588 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.
கண் பார்வையற்றோர், காது கேளாதோர்- வாய் பேசாதோர் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கான தேர்வு எழுதுவோருக்கு ஒரு மொழி பாடம் தவிர்ப்பு மற்றும் கூடுதல் ஒரு மணி நேரம் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.
தேர்வு எழுதும் மாணவர்களைக் கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் திடீர் சோதனை நடத்துவார்கள்.
மார்ச் 23 முதல் பத்தாம் வகுப்பு தேர்வு..
பிளஸ்டூவைத் தொடர்ந்து, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 23ம் தேதி முதல் ஏப்ரல் 7ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் 8 லட்சத்து 56 ஆயிரத்து 966 மாணவ-மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதுகிறார்கள். தனியாக 99 ஆயிரத்து 353 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.
மெட்ரிக்குலேசன் தேர்வு மார்ச் 23 முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை நடக்கிறது. இதில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 20 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். ஆங்கிலோ இந்தியன் தேர்வை 4 ஆயிரத்து 492 மாணவ-மாணவிகள் எழுது கிறார்கள். 1,593 மாணவ- மாணவிகள் ஓ.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுகிறார்கள்.
10, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் மொத்தம் 2 ஆயிரத்து 791 மையங்களில் நடக்கிறது.
புழல் சிறையில் 4 கைதிகள் பிளஸ்-2 தேர்வும், 18 கைதிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வும் எழுதுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.