கிரிமினலாக இருந்தாலும் சுட்டுக் கொல்ல போலீஸாருக்கு உரிமை இல்லை- உயர்நீதிமன்றம்
சென்னை: கிரிமினலாக இருந்தாலும் கூட, யாரையும் சுட்டுக் கொல்ல போலீஸாருக்கு எந்தவித உரிமையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னையை அடுத்த பனையூர் அருகே போலீஸாருடன் நடைபெற்ற மோதலில் "திண்டுக்கல்' பாண்டி, வேலு ஆகியோர் பிப்ரவரி 8-ம் தேதி கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து சிறைக் கைதிகளுக்கான உரி்மை அமைப்பின் இயக்குநரான புகழேந்தி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், மோதலில் இருவரும் கொல்லப்பட்டது மனித உரிமை மீறலாகும். சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அதில் கோரியிருந்தார்.
தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதி கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட முதன்மை டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனும், அரசு தரப்பில் வழக்கறிஞர் ராஜா கலிஃபுல்லாவும் ஆஜராயினர்.
அப்போது தலைமை நீதிபதி கூறுகையில், மனித உரிமை மீறல் தொடர்பாக மனுதாரர் முதலில் அதிகாரிகளிடம் மனு அளித்திருக்க வேண்டும். அவர்கள் நடவடிக்கை எடுக்கத் தவறியிருந்தால், நீதிமன்றத்தை அணுகியிருக்க வேண்டும் என்றார்.
அரசுத் தரப்பு வக்கீல் கூறுகையில், என்கவுன்டர் சம்பவம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். மோதலில் இறந்த நபர் மீது 14 கொலை வழக்குகள் உள்ளன என்றார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, இப்படி கூறுவதன் மூலம் சம்பவத்தை நியாயப்படுத்த முடியாது. குற்றவாளியாகவே இருந்தாலும் கூட, யாரையும் கொலை செய்வதற்கு போலீஸாருக்கு உரிமையில்லை என்றார்.
பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.நந்தகுமார், எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.மகேந்திரன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று பெஞ்ச் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து மார்ச் 11ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.