கொடைக்கானலில் ரூ.23 லட்சம் மோசடி செய்த சுய உதவிக் குழு உறுப்பினர் கைது !
திண்டுக்கல்: கொடைக்கானலில் மகளிர் சுய உதவிக் குழு நடத்தி 23 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கொடைக்கானலில் கீழ் பூமி பிரம்மபுத்திரா பெண்கள் இணைப்பு குழுவின் கீழ் 237 மகளிர் சுய உதவிக்குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக சென்பகனூர் மரிய ஜெயா இருந்து வருகின்றார்.
இவர், உறுப்பினர்களுக்கு தேவையான வங்கிக் கடன்களை பெற்றுத் தருவதும், இந்த பணத்தை வசூல் செய்து வங்கியில் கட்டுவதாக கூறி கிராம பெண்களிடம் பல லட்சம் ரூபாய் பெற்று கையாடல் செய்து விட்டு தலைமறைவானார்.
இவருக்கு உதவியாக விமலாராணி, தனபாக்கியம், ஆரோக்கிய செல்வி, லாரன்ஸ் செல்வி, மெர்சி, ஜாகீர் லூர்துராஜ் ஆகியோர் செயல்பட்டதாக கூறப்படுகின்றது.
இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள், கடந்த வாரம் கொடைக்கானல் சென்பகனூர் சுயஉதவிக்குழு அலுவலகம் அருகே நடந்து சென்ற இந்த குழுவை சேர்ந்த மெர்சி என்ற பெண்ணை கேட்டில் கட்டி வைத்து மறியல் செய்ததோடு, திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.
இதனையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த குழுவில் பணியாற்றிய கொடைக்கானல் லேக் ரோட்டை சேர்ந்த லாரன்ஸ் செல்வியை (43) கைது செய்தனர்.