சிலியில் பயங்கர பூகம்பம்: பசிபிக் கடலில் சுனாமி: பல நாடுகளில் உஷார் நிலை
மேலும் பசிபிக் கடல் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளும் சுனாமி அலைகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு ஜப்பான் புவியியல் மையம் எச்சரித்துள்ளது.
இன்று காலை சிலி அருகே உள்ள கன்செப்சியான் நகர் அருகே கடல் பகுதியில் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரி்க்டர் அளவுகோளில் 8.8 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் சிலியில் ஏராளமான கட்டங்கள் இடிந்து விழுந்துள்ளன.
இதில் 47 பேர் வரை உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், உயிர்ப் பலி மிக மிக அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.
இந்த பயங்கர நிலநடுக்கத்தையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடு்க்கப்பட்டுள்ளது.
கடலுக்கடியில் 59 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சிலி முழுவதும் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.
மின்சாரம் தடைபட்டுவிட்டதால் சர்வதேச விமான நிலையம் உள்பட சிலியின் பெரும்பாலான விமான நிலையங்களும் மூடப்பட்டுவிட்டன.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் உருவாகியிருப்பதை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
1.5 மீட்டர் உயரம் கொண்ட சுனாமி அலைகள் உருவாகி தென் அமெரிக்காவுக்கு வடக்கிலும் தெற்கிலுமாக மணிக்கு 800 கி.மீ. வேகத்தில் பயணித்து வருவதாக சிஎன்என் தொலைக்காட்சி கூறியுள்ளது.
இதையடுத்து பசிபி்க் பிராந்தியத்தில் உள்ள பிலிப்பைன்ஸ்சிலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அதே போல ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையோரமும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும் சிலிக்கு அருகே உள்ள கொலம்பியா, பனாமா, கோஸ்டாரிகா மற்றும் தூரத்தில் உள்ள ஹவாஸ் தீவுகள், அண்டார்டிகாவுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1900ம் ஆண்டுக்குப் பின் உருவான மிகப் பெரிய பூகம்பங்களில் 5வது பூகம்பம் இது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே சிலியின் தென் பகுதிக்கு சுனாமி ஆபத்து நீங்கிவிட்டதாக அந் நாட்டு கடற்படை தெரிவித்துள்ளதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.
ஜப்பானிலும் கடும் நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை வாபஸ்
அதே போல ஜப்பானின் ருயூக்சு தீவுகளில் இன்று காலை மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதையடு்த்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. பின்னர் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
ஜப்பானின் தெற்கில் உள்ள ஒகினோவா தீவுக்கு அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.3 புள்ளிகளாகப் பதிவானது.
கடந்த 100 ஆண்டுகளில் இப் பகுதியில் ஏற்பட்ட மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தையடுத்து சுனாமி அலைகள் ஏற்படும் என ஜப்பான் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. ஆனால், பல மணி நேரத்தக்குப் பின்னரும் அலைகள் ஏதும் ஏற்படாததால் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஒரு கட்டடம் இடிந்து 2 பேர் காயமடைந்தனர். மற்றபடி பெரிய சேதம் ஏதும் ஏற்படவில்லை.
கடலுக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சிலியில் பூகம்பம் ஏற்பட்டது.