சட்டசபைக் கட்டடத்தை கட்டி முடிக்காமல் பட்ஜெட் கூட்டத் தொடர் கூடாது - டிராபிக் ராமசாமி வழக்கு
சென்னை: புதிய சட்டசபைக் கட்டத்தை முழுமையாக கட்டி முடித்து அதற்குரிய சான்றிதழ் பெறப்படாமல், அங்கு பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்தக் கூடாது என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஏற்கனவே, புதிய சட்டசபைக் கட்டத்தை முழுமையாக கட்ட வேண்டும். அதை தற்போது வேகம் வேகமாக கட்டி வருவதால் அதன் ஸ்திரத்தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளது. எனவே திறப்பு விழாவை நடத்த அனுமதிக்கக் கூடாது என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஆனால் இதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இந்த நிலையில் இன்னொரு புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்திருப்பவர் பிரபல சமூக சேவகர் டிராபிக் ராமசாமி.
இதுகுறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூ.450 கோடியில் புதிய சட்டப்பேரவை வளாகம் அவசர, அவசரமாகக் கட்டப்பட்டு வருகிறது.
சுமார் 9 லட்சம் சதுர அடியில் உருவாகும் இந்த வளாகம், முழுமையாக முடிக்கப்படாமலேயே திறக்கப்பட உள்ளது. இதில், பட்ஜெட் கூட்டத் தொடரும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமையில் சட்டப்பேரவை கட்டுமானப் பணிகளின் போது ஏற்பட்ட விபத்தில் 12 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இந்த சூழலில், இவ்வளாகத்தை முழுமையாகக் கட்டி முடிக்காமல் அதில் பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்துவது பாதுகாப்பானது அல்ல.
அடுக்குமாடி கட்டடங்கள் தொடர்பான விதிகளின் படி, சட்டப்பேரவை வளாகத்தை முழுமையாகக் கட்டி முடித்ததற்கான சான்றிதழைப் பெறாமல், இந்தக் கட்டடத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
கட்டி முடித்ததற்கான சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களையும் நீதின்றத்தில் தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார் ராமசாமி.
விரைவில் இந்த மனு பரிசீலனைக்கு வருகிறது.