மகளிர் மசோதாவை லோகச்பாவிலும் நிறைவேற்ற காங். தீவிரம்
டெல்லி: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை நடப்பு கூட்டத் தொடரிலேயே முழுமையாக நிறைவேற்றி விட காங்கிரஸ் முனைப்புடன் திட்டமிட்டு வருவதாக டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சி வரிசையில் உள்ள பாஜக, இடதுசாரிகள், அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ராஜ்யசபாவில் இந்த மசோதாவை நிறைவேற்றி விட்டாலும், அடுத்து லோக்சபாவில் பெரும் சவால் காத்திருக்கிறது.
15 ஆண்டு காலத்துக்கு பின் வரலாற்றுச் சிறப்பு மிக்க திருப்புமுனையை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது இந்த மசோதா பாதி கிணறு தாண்டிய நிலையில் நின்றுவிடுமோ என்ற அச்சம் காங்கிரஸ் தலைமைக்கு உள்ளது.
ராஜ்யசபாவில் முழு ஆதரவை தெரிவித்ததோடு, முதல் கட்சியாக உறுப்பினர்களுக்கு மசோதாவை ஆதரிப்பதற்கான கொறடா உத்தரவைப் பிறப்பித்தது பாஜக தான். ஆனால், அடுத்த சில நாட்களில் பாஜகவின் பல்வேறு மட்டத்தில் இம்மசோதா குறித்த மாற்று விமர்சனங்கள் எழத் தொடங்கி விட்டன.
லோக்சபாவில் மசோதாவுக்கு எதிராக வாக்களிக்கவும், மகளிர் மசோதாவுக்கு எதிரான கருத்துக்களை நாடு முழுவதும் பரப்பவும் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் தேசிய அளவில் 'லாபி' அமைத்து செயல்படுகின்றனர்.
அடிப்படையில் ஆணாதிக்க உணர்வும், 'ஸ்டீரியோ டைப்' எண்ணம் கொண்ட சில அதிகார வர்க்கத்தினர் திட்டமிட்டு மசோதாவுக்கு எதிரான மறைமுக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் தலைமை நம்புகிறது.
எனவே எப்பாடு பட்டாவது நடப்பு கூட்டத்தொடரில் மசோதாவை நிறைவேற்ற எல்லா வித வியூகங்களையும் வகுத்து, எந்த அஸ்திரத்தையும் பயன்படுத்த தயார் நிலையில் காங்கிரஸ் உள்ளது என தலைமையக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் லாலு, முலாயம் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தும் போது இடைத் தேர்தலை சந்திக்கவும் தயாராக இருக்கும் மனோபாவத்துடன் பேச காங்கிரஸ் திட்டமிட்டிருக்கிறது.
கடந்த 1971ம் ஆண்டு இந்திரா காந்தி இதேபோன்ற சூழ்நிலையை சந்தித்த போது எப்படி செயல்பட்டார் என்பதையும், அதை எதிர்க்கட்சிகள் நன்கு அறிவார்கள் என்றும் காங்கிரஸ் தலையமையக நிர்வாகிகள் விளக்குகின்றனர்.
கடந்த 1970ம் ஆண்டு மன்னர் மானியத்தை ஒழிக்க வகை செய்யும் அவசர சட்டத்தை, ஜனாதிபதி பிறப்பித்தார். ஆனால், அந்த சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனால் லோக்சபாவை கலைத்துவிட்டு, தேர்தலை நடத்த இந்திரா காந்தி முடிவு செய்தார். அதன்படி அதே ஆண்டு டிசம்பர் 28ம் தேதி லோக்சபா கலைக்கப்பட்டது. பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் வலிமையாக இருந்ததால், திமுகவுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட இந்திரா காந்தி விரும்பினார்.
இதற்காக கருணாநிதியை டெல்லிக்கு அழைத்து பேசினார். லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலையும் நடத்த கருணாநிதி முடிவெடுத்தார்.
இதைத் தொடர்ந்து, கடந்த 1971ம் ஆண்டு மார்ச் 1, 4 மற்றும் 7 தேதிகளில் தமிழக சட்டசபைத் தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் நடந்தன. இதில் காங்கிரஸும், திமுகவும் அமோக வெற்றி பெற்றன.
இந்த வரலாற்றையும், தற்போதைய நிலவரத்தையும் காங்கிரஸ் வட்டாரத்தில் சிலர் ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.