பென்னாகரம்: கருணாநிதி 1 நாள், ஜெ. 2 நாள், விஜய்காந்த் 5 நாள் பிரச்சாரம்
பென்னாகரம் இடைத் தேர்தல் 27ம் தேதி நடைபெறுகிறது. இதில் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய நான்கு முக்கியக் கட்சிகள் போட்டியிடுகின்றன. தற்போதைய நிலவரப்படி திமுக - பாமக இடையில்தான் மோதல் படு சூடாக இருக்கிறது.
அதிமுக சோம்பிப் போய்க் கிடக்கிறது. தேமுதிகவைக் காணவில்லை.
இந் நிலையில் திமுக வேட்பாளருக்காக முதல்வர் கருணாநிதி ஒரு நாள் பிரசாரம் செய்கிறார். அவர் பிரசாரம் செய்ய வசதியாக மூன்று நாட்களைத் தேர்வு செய்துள்ளனர். இருப்பினும் 24ம் தேதி அவர் பிரசாரம் செய்யலாம் என்று தெரிகிறது.
இதேபோல துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 23, 24, 25 ஆகிய மூன்று நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொள்கிறார்.
ஜெயலலிதா 2 நாள் பிரச்சாரம்:
இந் நிலையில் அதிமுக வேட்பாளர் அன்பழகனை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 2 நாட்கள் பிரசாரம் செய்யவுள்ளார்.
தற்போது கொடநாட்டில் ஓய்வெடுத்து வரும் ஜெயலலிதா பிரசாரத்திற்காக வருகிற 21ம் தேதி சேலம் வருகிறார். அங்கு தங்கும் ஜெயலலிதா 22ம் தேதி மற்றும் 23ம் தேதி ஆகிய இரு நாட்கள் பென்னாகரத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
21ம் தேதி, சேலம் மாவட்டம் மேச்சேரி வழியாக பென்னாகரம் தொகுதிக்கு ஜெயலலிதா வேனில் செல்கிறார். அங்கு தொப்பையாறு, நாகமலை, பெரும்பாலை, ஏரியூர், நெருப்பூர் வழியாக பல்வேறு ஊர்களில் ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார்.
அன்று மாலை பென்னாகரத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு வேட்பாளர் டி.ஆர்.அன்பழகனை ஆதரித்து பேசுகிறார். பின்னர் தர்மபுரி வழியாக மீண்டும் சேலம் வந்து தங்குகிறார்.
23ம் தேதி மீண்டும் தர்மபுரி வழியாக வேனில் வந்து இண்டூரில் பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து தாளபள்ளம், மாமரத்துப்பள்ளி, ஆலமரத்துப்பட்டி, மன்னேரி வழியாக பிரசாரம் செய்து முடித்து விட்டு பாப்பாரப்பட்டியில் நடக்கும் பொதுகூட்டத்தில் அவர் பேசுகிறார்.
21ம் தேதி முதல் விஜயகாந்த் 5 நாள் பிரசாரம்:
இந் நிலையில் தேமுதிக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேமுதிக வேட்பாளர் காவேரிவர்மனை ஆதரித்து தலைவர் விஜயகாந்த் வரும் 21, 22, 23, 24, 25 ஆகிய 5 நாட்கள் பென்னாகரம் தொகுதி முழுவதும் பிரசார பயணம் மேற்கொள்கிறார்.
மாவட்ட கழக செயலாளர்களும், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளை கழக செயலாளர்களும், நிர்வாகிகளும் சார்பு அணி நிர்வாகிகளும், கழகத் தோழர்களும், ஆதரவாளர்களும் விஜயகாந்த் பிரசாரம் செய்கின்ற பகுதிகளில் சிறப்பான முறையில் வரவேற்று தேர்தல் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவேற்றித்தரக் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.