சத்யம் ராஜுவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு!
டெல்லி: சத்யம் நிறுவன மோசடி வழக்கில் அதன் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜுவுக்கு ஜாமீன் மறுத்துள்ளது உச்ச நீதிமன்றம்.
ரூ.7,800 கோடி மோசடி தொடர்பாக சரணடைந்த ராஜூ இப்போது ஹைதராபாத் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் அவரது தம்பி மற்றும் சத்யம் நிறுவன முன்னாள் உயரதிகாரிகள் சிலரும் அடைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து தனது ஜாமீனுக்கு முயன்று வருகிறார் ராமலிங்க ராஜு. ஒவ்வொரு முறையும் அவரது மனுவை நீதிபதிகள் நிராகரித்து வருகின்றனர்.
இந்த முறை உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்தார் ராஜு. இந்த மனு தலைமை நீதிபதிகள் கேஜி பாலகிருஷ்ணன், தீபக் வர்மா மற்றும் பிஎஸ் சௌஹான் விசாரித்தனர்.
பின்னர் தங்களின் தீர்ப்பில், "இதுபோன்ற கடுமையான மோசடிக் குற்றங்களைச் செய்தவர்கள் கட்டாயம் ஜெயிலில் இருந்தே தீரவேண்டும். ஜாமீனுக்கு ராஜுவின் உடல் நிலையைக் காரணமாகக் காட்டுவகதையும் ஏற்க முடியாது. காரணம், அவருக்கு சரியான சிகிச்சை தரப்பட்டு வருகிறது என்று தீர்ப்பளித்தனர்.
முன்னதாக 2009ம் ஆண்டு ஜனவரி முதல் ராஜு சிறை வைக்கப்பட்டுள்ளார். இதே குற்றத்துக்காக சிறையிலடைக்கப்பட்ட மற்ற அதிகாரிகள் சிலருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில் ராஜுவுக்கு மட்டும் ஜாமீன் மறுப்பது ஏன்?' என்று ராஜுவின் வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.