காரைக்கால் மது பாரில் மோதல்-கல்லூரி ஆசிரியர் பலி
காரைக்கால்: காரைக்காலில் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
காரைக்கால் அடுத்த பொறையாறு மார்க்கெட் வீதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமிசுந்தர் (30) . இவர் காரைக்காலில் உள்ள தனியார் கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகின்றார்.
இவர், பாரதியார் சாலையில் உள்ள ஒரு ஒயின்சில் மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது மொபைல் போனில், தன் உறவினருடன் சத்தமாக பேசிக் கொண்டிருந்தார்.
இதனால், எதிரே மது குடித்துக் கொண்டிருந்த காரைக்கால் டோபி காலனியை சேர்ந்த ஆரோக்கியராஜ் -க்கும் இவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில், பாருக்கு வெளியே வந்த ஆரோக்கியசாமி சுந்தரை, ஆரோக்கியராஜ் வழிமறித்து தாக்கினார். மேலும், கண்ணாடி துண்டுகள் மூலம் ஆரோக்கியசாமிசுந்தரின் மார்பில் குத்தினார்.
இதில் படுகாயமடைந்த ஆரோக்கியசாமிசுந்தரை பார் ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவ மனை கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து, ஆரோக்கியராஜை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.