அமெரிக்காவில் சுகாதார பாராமரிப்பு சட்டமசோதா நிறைவேறியது
அமெரிக்காவில் 97 விழுக்காட்டினர் மருத்துவ காப்புறுதி பெறுவதை உறுதி செய்யவும், இன்சூரன்ஸ் மோசடிகளை தடுக்கவும் வகை செய்யும் இந்த மசோதாவை தனது முக்கிய வாக்குறுதியாக தேர்தல் பிரச்சாரத்தின் ஒபாமா முன்வைத்திருந்தார்.
இரு மாதங்களுக்கு முன்பு செனட் சபையில் ஒப்புதல் பெறப்பட்ட இந்த மசோதா நேற்று பிரதிநிதிகள் சபையில் 219க்கு 212 என்ற விகிதத்தில் பெரும்பான்மை ஆதரவு ஓட்டுக்களை பெற்று நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்க காங்கிரஸின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெறப்பட்ட இந்த மசோதாவில் இன்று அதிபர் ஒபாமா கையெழுத்திட உள்ளார்.
இந்த மசோதா அமலுக்கு வந்தால், அமெரிக்காவில் இதுவரை மருத்துவ காப்புறுதி பெறாத மக்கள் அனைவரும் காப்புறுதி பெறுவது சுலபமாகும்.
இன்ஸுரன்ஸ் தொகை திருப்பிப்பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் மற்றும் மோசடிக்கான வாய்ப்புகள் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த காலத்தில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்ட சமயங்களில் பல்வேறு கம்பெனிகள் தொழிலாளர்களின் இன்சூரன்ஸ் தொகையை வழங்க மறுத்தது.
இதன் காரணமாக பலர் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். இதனால் பலர் நோய்வாய்ப்படும் போது பெரும் இன்னல்களை சந்திக்க வேண்டியிருந்தது.
இவற்றுக்கு தீர்வாகவே இந்த மசோதாவை கொண்டுவருவதாக ஒபாமா வாக்களித்திருந்தார்.
எனினும் இன்மசோதாவால் அரசுக்கு வரிச்சுமை கூடுதலாகும் என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சியினர் முன் வைத்தனர். ஆனால் அவையில் பெரும்பான்மை ஓட்டுகளை பெற்று மசோதா நிறைவேறியுள்ளது.