திமுக-காங்கிரசுக்கு எதிராக கூட்டணி-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
மதுரை: தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக கூட்டணி அமைக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் கூறினார்.
மதுரையில் நிருபர்களிடம் பேசிய அவர், திமுக- காங்கிரஸ் கட்சிகளின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்க்கும் அதிமுகவை நாங்கள் ஆதரிப்பது என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது.
தற்போது அதிமுகவுடன் கூட்டணியாக இருக்கிறோம். அடுத்த சட்டசபை தேர்தலில் கூட்டணி பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் திமுக- காங்கிரசுக்கு எதிராகக் கூட்டணி அமைப்போம்.
சிறுதாவூரில் 53 ஏக்கர் நிலத்தை சம்பந்தப்பட்ட 20 குடும்பங்களைச் சேர்ந்த வாரிசுதாரர்களுக்கு ஒப்படைக்க வேண்டும்.
ஏழை, எளிய மக்களுக்கு உயர்கல்வி என்பது எட்டாக் கனியாக உள்ளது. இந்த நிலையில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி, உயர்கல்வி கவுன்சில் அமைப்பது குறித்த மத்திய அரசின் முயற்சி ஆகியவை அபாயத்தை ஏற்படுத்தியுள்ளன. பள்ளி கட்டணத்தை இன்னும் குறைக்க வேண்டும்.
பருத்தி நூல் தற்போது கிலோவிற்கு 5 ரூபாயாக குறைக்கப்பட்டது போதாது. விசைத்தறி, கைத்தறி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே நூல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.