திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம் - இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
ஆறுமுகநேரி: திமுக அரசுக்கு தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆதரவு தரும். கூட்டணியிலும் தொடர்ந்து நீடிப்போம் என அக்கட்சியின் வேலூர் எம்.பி. அப்துல் ரஹ்மான் கூறியுள்ளார்.
இந்திய யூனியன் மூஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் காயல்பட்டிணத்தில் நடந்தது. இதில் வேலூர் எம்பி அப்துல் ரகுமான் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
ஜூன் மாதம் நடக்கும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எல்லா விதமான ஓத்துழைப்பையும் தரும். சிறுபான்மை மக்களின் கோரிக்கைகளை உடனடியாக ஏற்று சிறப்பான திட்டங்களை செயல்படுத்தும் தமிழக அரசுக்கு முஸ்லீம் லீக் தொடர்ந்து ஆதரவு வழங்கும்.
அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலிலும் தி்முக கூட்டணியில் நீடிப்போம். கருணாநிதியை தமிழக மக்கள் மீண்டும் முதல்வர் பதவியில் அமர்த்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. திமுக ஆட்சி தொடர முழுமையான ஆதரவை வழங்குவோம்.
அக்டோபர் மாதம் சென்னையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் மத நல்லிணக்க மாநாடு நடத்தப்படும். அதில் சிறுபான்மை சமுதாய மக்களக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் முதல்வர் கருணாநிதிக்கு சமூக நல்லிணக்க விருது வழங்கப்படும் என்றார் அவர்.