முன்னாள் அதிமுக அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமி மரணம்
சென்னை: எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இடம் பெற்றிருந்த கே.ஏ.கிருஷ்ணசாமி இன்று காலை சென்னையில் மரணமடைந்தார்.
உடுமலைப்பேட்டை அருகே கணியூரில் திராவிடப் பாரம்பரிய மிக்க குடும்பத்தில் பிறந்தவர் கே.ஏ.கிருஷ்ணசாமி. மறைந்த மூத்த அரசியல் தலைவர் கே.ஏ. மதியழகனின் இளைய சகோதரரான கிருஷ்ணசாமி, திராவிட மாணவர் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்.
1972 முதல் 1978 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் பின்னர் தமிழக மேலவை உறுப்பிரனராகவும், அமைச்சராகவும் பணியாற்றியவர்.
கடந்த பல வருடங்களாகவே தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தார். இந்த நிலையில் சமீப காலமாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 78.
அனைவராலும் கேஏகே என்று அன்புடன் அழைக்கப்பட்டவர் கிருஷ்ணசாமி.
மறைந்த கே.ஏ.கிருஷ்ணசாமியின் உடலுக்கு முதல்வர் கருணாநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
கே.ஏ.கே.வின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.