வங்கக் கடலில் 'லைலா' புயல்: தமிழகத்தில் கன மழை பெய்யும்; நாகை-பாம்பனில் எச்சரிக்கை கூண்டு!
இந்தப் புயலுக்கு 'லைலா' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் சூறாவளி்க் காற்றுடன் கன மழை பெய்து வருகிறது.
சென்னை, செங்கல்பட்டு, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
திண்டிவனம், விழுப்புரம், புதுச்சேரியில் சூறாவளி்க் காற்றுடன் கனமழை பெய்கிறது.
வேதாரண்யம், ராமேஸ்வரம், கடலூர் உள்ளிட்ட இடங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னையில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.
இதனால் அந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து புயல் சின்னமாக மாறியுள்ளது.
இது இப்போது சென்னைக்கு 400 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகப்பட்டணத்துக்கு 550 கிலோ மீட்டர் தொலைவிலும், கொல்கத்தாவுக்கு 1,200 கிலோ மீட்டர் தொலைவிலும் புயல் நிலை கொண்டுள்ளது
லைலா என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் தொடர்ந்து வட மேற்கு திசையில் நகர்ந்து ஆந்திராவில் ஓங்கோல்-விசாகப்பட்டணம் இடையே வரும் 20ம் தேதி அதிகாலை கரை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக வடக்கு தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் மிக பலத்த காற்றுடன் கன மழை பெய்யும்.
புயல் சின்னம் கரையை நெருங்கும் போது, தமிழகத்தில் பல பகுதிகளிலும் கன மழையுடன் சுமார் 55 முதல் 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.
கடல் மிகவும் சீற்றமாக காணப்படும் என்பதால் ஆந்திர கடல் பகுதியில் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
நாகை-பாம்பனில் எச்சரிக்கை கூண்டு
இந்தப் புயல் சின்னம் காரணமாக நாகை, பாம்பன், கடலூர் துறைமுகங்களில் 3ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் 20ம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
புயல் சின்னம் காரணமாக ஆந்திர மாநிலத்தில் 9 கடலோர மாவட்டங்களில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகங்களை ஆந்திர அரசு கேட்டுக்கொண்டுள்ளது.