அந்தமானில் தொடங்கியது தென் மேற்குப் பருவ மழை
டெல்லி: தென் மேற்கு பருவ மழை 3 நாட்கள் முன்கூட்டியே தொடங்கியுள்ளது. நேற்று அந்தமானில் பருவ மழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மொத்தம் இரண்டு பருவ மழைகள் உள்ளன. ஒன்று தென் மேற்குப் பருவ மழை, இன்னொன்று வட கிழக்குப் பருவ மழை. இதில் தென் மேற்குப் பருவ மழை மூலம்தான் நாடு முழுவதும் பரவலமாக மழை கிடைக்கிறது.
இந்திய விவசாயிகளின் ஜீவாதாரமாகக் கருதப்படும் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மே மாத மத்தியில் துவங்கும். இந்தாண்டும் வழக்கம் போல், வரும் 20ம் தேதி அந்தமான் கடல் பகுதிகளில் பெய்யத் துவங்கும். வரும் 30ம் தேதி முதல் கேரளாவில் பெய்யத் துவங்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் கூறியிருந்தது.
இந்நிலையில், மூன்று நாள் முன்னதாக நேற்றே அந்தமானில் பருவமழை பெய்யத் தொடங்கி விட்டது.
இதுகுறித்து வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் கூறுகையில், பருவமழை முன்னதாகவே பெய்துள்ளது. இதன் காரணமாக, கேரளாவிலும் ஏற்கனவே வெளியான அறிவிப்புக்கு முன்னதாகவே மழை பெய்யத் துவங்கும். பின்னர், வட மாநிலங்களில் பருவமழை பெய்யும் என்றனர்.
திரும்பி வந்த விமானம்:
இதற்கிடையே, சென்னையில் இருந்து நேற்று அதிகாலை 4.30 மணிக்கு அந்தமானுக்கு கிங் பிஷர் விமானம் 147 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. அந்தமானில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, விமானத்தை அங்கு தரையிறக்க முடியவில்லை.
இதனால் விமானம் சிறிது நேரம் வானத்தில் வட்டமிட்டது. வானிலை தொடர்ந்து மோசமாக இருந்ததால், காலை 10 மணிக்கு விமானம் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தது.
தமிழ்நாட்டில் வெயில் அளவு:
இந் நிலையில் தமிழகத்தில் நேற்று அதிகபட்சம் வெப்பம் பதிவான இடங்கள் விவரம்:
வேலூர்- 108.86
மதுரை- 104.36
சேலம்- 103.64
திருச்சி- 103.46
பாளையங்கோட்டை- 103.1
கடலூர்- 102.38
நாகை- 101
புதுச்சேரி- 100.22
தூத்துக்குடி- 100.4
சென்னை- 99.86
கோவை- 96.8
கன்னியாகுமரி- 94.46
கொடைக்கானல் - 71.42