சொத்து குவித்த வழக்கு: கு.ப.கிருஷ்ணன் விடுதலை
1991-96ம் ஆண்டில் ஜெயலலிதா தலைமைலான அதிமுக ஆட்சியில் வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்தவர் கு.ப.கிருஷ்ணன்.
இவர் தனது வருமானத்தைவிட அதிகமாக ரூ.3.73 கோடி சொத்து சேர்த்தது தொடர்பாக திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் கு.ப.கிருஷ்ணன், அவரது மனைவி மல்லிகா, தம்பி பாலு, அக்காள் கனகவல்லி, அக்காள் மகன் வானவரம்பன், மைத்துனர் சிட்டிபாபு, உறவினர்கள் பழனியப்பன், ராஜமுத்து இருளாண்டி, காத்தான், மாமனார் கோவிந்தராஜன் ஆகிய 10 பேரும் சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கை சென்னை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. 1996ம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை 2003ம் ஆண்டு டிசம்பரில் தாக்கல் செய்யப்பட்டது. 383 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
விசாரணை காலத்தில் அக்காள் கனகவல்லி, மாமனார் கோவிந்தராஜன் ஆகியோர் இறந்துவிட்டனர். சமீபத்தில் வழக்கு விசாரணை முடிவடைந்தது.
இந் நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட 8 பேரையும் விடுதலை செய்து நீதிபதி ராமராஜ் உத்தரவிட்டார்.
தனது 150 பக்கத் தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சந்தேகத்துக்கு இடமின்றி குற்றங்களை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதாக நீதிபதி கூறியுள்ளார்.
இன்று தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி, கு.ப. கிருஷ்ணன் உள்ளிட்ட 8 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
தனி கட்சி நடத்திய கு.ப.கிருஷ்ணன்:
ஜெயலலிதா ஆட்சி போன பின் அதிமுகவிலிருந்து விலகி நம்பி தமிழர் பூமி என்ற கட்சியை ஆரம்பித்தார். முத்தரையர் சமூகத்தினருக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கட்சியை பின்னர் கலைத்துவிட்டு தேமுதிகவில் இணைந்தார்.
அவரை மாநில துணைச் செயலாளராக்கினார் தேமுதிக தலைவர் விஜய்காந்த். இந் நிலையில் கடந்த ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி ஜெயலலிதாவை சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.