For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சமூக சீர்திருத்தத்தில் முன்னோடி தமிழர்கள்!-குடியரசுத் தலைவர் புகழாரம்

By Chakra
Google Oneindia Tamil News

Prathiba Patil
கோவை: இந்தியாவில் சமூக சீர்த்திருத்தப் பணிகளில் முதலிடத்தில் நிற்பது தமிழர்களே என்றார் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை இன்று புதன்கிழமை காலை கோவையில் துவக்கி வைத்து அவர் ஆற்றிய சிறப்புரை:

"வணக்கம்... உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான தமிழ் அறிஞர்கள் பங்கு பெற்றுள்ள இந்த சிறப்புமிக்க பிரமாண்ட மாநாட்டில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வந்துள்ள அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

செம்மொழி அந்ததை 2004-ம் ஆண்டு பெற்றது தமிழ். இது தமிழ் மொழியின் இலக்கிய வளம், கலாச்சார செறிவு மற்றும் அதிக மக்களிடைய பரவியுள்ள தன்மைக்குக் கிடைத்த அங்கீகாரமாகும். தமிழக முதல்வர் கருணாநிதியின் இடையறாத முயற்சிக்குக் கிடைத்த வெற்றியும் கூட. அவர் வெறும் நிர்வாகி மட்டுமல்ல, மிகச் சிறந்த இலக்கிய அறிஞர். அரை நூற்றாண்டுக்கும் மேல் தமிழில் எழுதி வருபவர். இந்த மாநாட்டின் மைய நோக்குப் பாடலையும் எழுதியுள்ளார். அவருக்கு எனது முதல் பாராட்டைத் தெரிவிக்கிறேன்.

தமிழ் மக்களுக்கு என் இதயத்தில் எப்போதும் சிறப்பிடம் உண்டு. அதுவும் சென்னை எனக்குப் பிடித்த நகரம். குடியரசுத் தலைவர் தேர்தல் பிரச்சாரத்தை நான் ஆரம்பித்ததே சென்னையில்தான். நான் குடியரசுத் தலைவரான பிறகு எனக்கு முதல் பாராட்டு விழா நடத்தியவர்கள் தமிழ் மக்களே. நான் பேசிய முதல் கூட்டமும் சென்னையில்தான் நடந்தது. இப்படி என் வாழ்க்கையில் பிரிக்க முடியாத சிறப்பு பெற்றவர்கள் தமிழர்கள்.

இந்த மக்கள் மிகச் சிறப்பானவர்கள். பண்பில் உயர்ந்தவர்கள். எப்போதும் மதச்சார்பின்மையில் உறுதியாக நிற்பவர்கள். கலாச்சாரத்தை பேணிக்காப்பவர்கள். சகிப்புத் தன்மைக்கு உதாரணமாகத் திகழ்பவர்கள். மனிதாபிமானமிக்கவர்கள். சங்க காலத்திலிருந்து இன்று வரை இந்த பண்புகளில் மாறாமல் உறுதியுடன் திகழ்பவர்கள்.

பாரதத்தின் பெருமை...

தமிழும் தமிழ் மக்களும் பாரத தேசத்தின் பெருமைக்குரிய அடையாளங்கள். இந்திய கலை, பண்பாட்டுச் சிறப்பில் தமிழுக்கு உன்னத இடம் உண்டு.

தமிழ் மக்கள் அறிவில் சிறந்தவர்கள். உழைப்பில் உயர்ந்தவர்கள். பண்டைய நாள்களில் சில்க் ரூட் எனப்பட்ட பட்டுவழித்தடம் மூலம் திரைகடலோடி திரவியம் தேடிய வல்லவர்கள்.

கி மு முதல் நூற்றாண்டிலேயே பல கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்கார இனம் என்றால் அது தமிழினம்தான். ஆன்மீகமும் கலையுணர்வும் தமிழர்களிடமிருந்து பிரிக்கமுடியாதவை.

தமிழர்கள் செல்லுமிடமெல்லாம் வெற்றியைப் பெறும் சிறப்பு மிக்கவர்கள். இந்த வெற்றி எதிர்காலத்திலும் தொடர வேண்டும் என்பதே எனது ஆசை.

அனைத்து மதங்களையும் சமமாக நோக்குவதில் தமிழர்களுக்கு இணையில்லை. இங்கு சைவமும் உண்டு, வைணமும் உண்டு, கிறிஸ்தவம், இஸ்லாம் என பிற மதங்களும் உண்டு. ஆனால் எல்லா மதங்களுக்கும் உரிய மரியாதையைக் கொடுத்து அமைதி வழியில் செல்லும் உன்னத சமூகம் தமிழினம். யாரிடத்தும் வேற்றுமை பார்ப்பதில்லை.

சீர்த்திருத்தத்தின் முன்னோடி...

இந்திய அரசின் அரசியல் சாசனத்தில் உள்ள சமத்துவம், சகிப்புத்தன்மை, சகோதரத்துவம், மதச் சார்பின்மை ஆகியவற்றுக்கு முழுமையான உதாரணம் தமிழகம்.

சமூக சீர்த்திருத்தங்களின் முன்னோடி என்பேன் தமிழகத்தை. 2000 ஆண்டுகளுக்கு முன்பே பல சமூகச் சீர்த்திருத்தங்களைச் செய்தவர்கள் தமிழர்களே.

தேசத்தின் பொருளாதார வளர்ச்சியிலும் தமிழகம் தோள்கொடுத்து நிற்கிறது. தமிழகத்தில் சமூக மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ள காரணத்தால் எல்லா சமூகத்தினரும் சமமாக மதிக்கப்படுகிறார்கள்.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் வாழும் கிராமப் பகுதிகளின் வளர்ச்சிப் பணிகள், அந்தப் பகுதி மக்களின் பங்கேற்புடன் கூடியதாக உள்ளது. தமிழகத்தில் கிராம பஞ்சாயத்துகள் மூலம் அப்படிப்பட்ட அமைப்பு முறை இருப்பதைக் காண முடிகிறது. இதனால் பொருளாதார, நிர்வாக ரீதியில் தன்னிச்சையாக செயல்படக் கூடிய வகையில் அவை செயல்படுகின்றன. இதுபோன்ற நிலைதான் நாட்டு வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும்.

இதற்கு மூலமான பஞ்சாயத் ராஜ் எனும் ஆட்சி முறையை முதல்முதலாக முழுமையாக நடைமுறைப்படுத்தியவர்கள் தமிழர்கள்தான். சோழ மன்னர்கள் காலத்திலேயே சுயமான கிராம நிர்வாக ஆட்சி முறைக்கு வித்திட்டவர்கள் தமிழ் மன்னர்கள்.

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்திலிருந்தே ஆட்சி முறைக்கும், நிர்வாகத் திறனுக்கும் பெயர் பெற்ற சமூகமாகத் திகழ்கிறார்கள் தமிழர்கள். பல்லவர்களின் கட்டடக்கலைச் சிறப்பும், சோழர்களின் செப்புக் கலை சிற்பங்களும் தேசத்தின் பெருமைகள்.

உலகின் மிகத் தொன்மையான மொழி, இந்தியாவின் மிகப் பழைமையான மொழி தமிழ் என்பதை பெருமையுடன் இங்கே சொல்லிக் கொள்கிறேன். கிமு 200வது ஆண்டில் தொல்காப்பியம் எனும் பிரமிக்க வைக்கும் இலக்கண நூலை தொல்காப்பியர் எழுதினார். சங்க காலப் புலவர்களின் இலக்கியம் இன்றும் பிரமிக்க வைக்கிறது. சங்க காலத்திலேயே ஆண் புலவர்களுக்கு நிகரான பெண் புலவர்களை தமிழ் சமூகம் ஆதரித்துள்ளது!

இந்த உலகமே எனது ஊர்தான், இந்த மக்களெல்லாம் என் உறவுகள்தான் என்ற பொருளில் 'யாதும் ஊரே; யாவரும் கேளீர்' என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் பாடியுள்ளார் ஒரு புலவர்.

திருவள்ளுவரின் திருக்குறள் காலத்தால் மறையாத ஒரு நீதிநூல் ஆகும். தேசத் தந்தை மகாத்மா அவர்கள், 'பொதுமறையான திருக்குறளைப் படிப்பதற்காகவே நான் தமிழை முழுமையாகக் கற்க வேண்டும்' என்றார். அப்படியொரு சிறப்பு தமிழுக்கு. சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என காப்பியங்கள் கொண்ட செம்மொழியான தமிழை ஆழ்வார்களும் நாயன்மார்களும் பேணி வளர்த்தனர்.

நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் மொழியின், தமிழகத்தின் பங்களிப்பு மகத்தானது. மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தனது தமிழ்க் கவிதைகள் மூலம் ஏற்படுத்திய சுதந்திர வேட்கை, தேச விடுதலையில் முக்கியப் பங்காற்றியது. சென்ற தலைமுறைகளுக்கும் வரவிருக்கிற தலைமுறைக்கும் சரியான பாலத்தை தமிழ் மொழி அமைத்திருக்கிறது. அடுத்த தலைமுறையினர் அதைப் பேணிக் காக்க வேண்டும்.

தமிழ் செம்மொழி மையத்தை விரைவில் அமைக்க வேண்டியதன் அவசியத்தையும் இங்கே வலியுறுத்த வேண்டியது அவசியமாகிறது.

இத்தனை சிறப்பு வாய்ந்த தமிழ் மொழிக்கு இவ்வளவு சிறப்பாகவும், பிரமாண்டமாகவும் விழா எடுத்த முதல்வர் கருணாநிதியை வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன். எனதருமைத் தமிழ் மக்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், நன்றி, வணக்கம்" என்றார்.

தனது பேச்சின் இடையிடையே தமிழ் செய்யுள் வரிகளைக் குறிப்பிட்டார் பிரதீபா பாட்டீல். உரையை முடிக்கும்போது தமிழில் பேசி முடித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X