'கொசுறு...' இறங்கியது கொத்தமல்லி அந்தஸ்து!
சென்னை: காசு கொடுத்துக் கேட்டாலும் கிடைக்காமலிருந்த கொத்தமல்லி இப்போது மீண்டும் கொசுறாகக் கிடைக்கத் துவங்கியுள்ளது.
வட மாவட்டங்களில்தான் அதிக அளவு கொத்தமல்லி விளையும். ஆனால் இந்த முறை மழை இல்லாமல் கொத்தமல்லி விவசாயமே பொய்த்துப் போனது.
இதனால் சென்னை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொத்த விலை ஷாக்கடிக்கும் அளவு உயர்ந்துவிட்டது. கட்டு ரூ 5-க்கு கூட வாங்க ஆளில்லாமல் கிடக்கும் கொத்தமல்லி விலை திடீரென்று ரூ 150க்கு மேல் உயர்ந்தது.
கோயம்பேட்டில் கொத்தமல்லி கிடைக்காத நிலை. ஆனால் நேற்று கிலோ ரூ 20-க்கு கூவிக்கூவி விற்கப்பட்டது.
வட மாவட்டங்களிலிருந்து மீண்டும் கொத்தமல்லி வரத்து அதிகரித்ததாலும், தென் மாவட்டங்களிலும் கொத்தமல்லி விளைச்சல் தொடங்கிவிட்டதாலும், உச்சத்திலிருந்த கொத்தமல்லி அந்தஸ்து, மீண்டும் கொசுறாகத் தருமளவு இறங்கிவிட்டது.
மற்ற காய்கறிகளைப் பொறுத்தவரை, சில்லறை விற்பனைக் கடைகளில் கிலோ தக்காளி 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கத்தரிக்காய் 24, வெண்டைக்காய் 20, புடலங்காய் 20, பீட்ரூட் 24, கேரட் 24, உருளைகிழங்கு 20, சேனை கிழங்கு 25, கருணை கிழங்கு 30, முருங்கைக்காய் கிலோ 40 என விற்பனையானது.