திமுக-காங் கூட்டணி: 'எதுவும் நடக்கலாம்'-இளங்கோவன்!
ஈரோடு: தற்போது காங்கிரஸ்-திமுக கூட்டணி உறுதியாக உள்ளது. ஆனால், நாளை நடப்பதை யாராலும் கூற முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
மத்திய அரசின் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பல முறைகேடுகள் நடப்பது தெரிய வந்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் வேலை செய்பவர்களுக்கு ஒரு நாள் ஊதியமாக ரூ.100 வழங்க வேண்டும். ஆனால் ரூ.70 மட்டுமே வழங்கப்படுகிறது. மீதி ரூ.30யை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் எடுத்துக் கொள்கிறார்கள்.
இளைஞர் காங்கிரஸார் கிராமப்புறங்களின் நிலை குறித்து ஆய்வு நடத்தியபோது, இந்த முறைகேடுகள் கண்டறியப்பட்டன.
இது தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதை இளைஞர் காங்கிரஸார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஏதேனும் முறைகேடு நடப்பது தெரிய வந்தால், நிச்சயமாக அதை எதிர்த்து காங்கிரஸ் போராடும்.
செம்மொழி மாநாடு நடத்துவதன் மூலம் தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் மிகப்பெரும் பெருமையை முதல்வர் கருணாநிதி சேர்த்துள்ளார்.
அதே நேரத்தில் தமிழக மக்களின் உயிருக்கும் உடமைக்கும் அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும். ரயில் தண்டவாளங்களைச் சேதப்படுத்துபவர்களுக்கும், ரயில்களைக் கவிழ்க்க சதி செய்பவர்களுக்கும் தக்க தண்டனை வழங்க வேண்டும்.
தற்போது காங்கிரஸ்-திமுக கூட்டணி உறுதியாக உள்ளது. நாளை நடப்பதை யாராலும் கூற முடியாது. திமுக கூட்டணியில் பாமகவைச் சேர்ப்பது தொடர்பாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. இது அவர்களது உள்கட்சிப் பிரச்சனை.
தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டுமா என்பதையும், எப்போது மாற்ற வேண்டும் என்பதையும் அன்னை சோனியா காந்தி விரைவில் அறிவிப்பார். அப்போதுதான் யார், யார் அப்பதவிக்குப் போட்டியிடுகிறார்கள் என்பது தெரிய வரும்.
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டத்தில் ஏழு ரூபாயை மத்திய அரசு தமிழக அரசுக்கு மானியமாக தருகிறது.
மேலும், அவசர சிகிச்சை "108' திட்டம் முழுக்க மத்திய அரசின் நிதியைக் கொண்டு செயல்படும் திட்டமாகும். இதை இளைஞர் காங்கிரஸார் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
செம்மொழி மாநாட்டுக்கு விடுதலைப்புலிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்ற, தகவலில் நம்பகத்தன்மையாக இல்லை. விடுதலைப் புலிகள் என்ற இயக்கமே தற்போது இல்லை என்றார் இளங்கோவன்.