ஜி-20 மாநாடு: பிரதமர் கனடா பயணம்-அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்து
டெல்லி: வரும் 26ம் தேதி கனடாவில் தொடங்கும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நாளை மறுநாள் கனடா செல்கிறார்.
ஜி-20 மாநாடு வரும் 26, 27 தேதிகளில் கனடாவில் நடைபெறுகிறது. இதில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, பிரதமர் மன்மோகன் சிங், சீன அதிபர் ஹூ ஜிந்தாவோ உள்ளிட்ட உலக தலைவர்கள் பஙகேற்கின்றனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக வியட்நாம், ஸ்பெயின், எத்தியோப்பியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்களும், ஐ.நா. பொது செயலாளர், உலக வங்கி தலைவர், சர்வதேச தொழிலாளர் அமைப்பு தலைவர் ஆகியோரும் பஙகேற்கின்றனர்.
மாநாட்டில் பஙகேற்க பிரதமர் மன்மோகன் சிங் நாளை மறுநாள் கனடா செல்கிறார். அங்கு அதிபர்கள் ஒபாமா, ஹூ ஜிந்தாவோ ஆகியோருடன் தனியாகவும் பேச்சு நடத்துகிறார்.
மாநாட்டின் போது இந்தியா-கனடா இடையிலான அணுசக்தி ஒப்பந்தமும் கையெழுத்தாக உள்ளது. இது தவிற மற்ற துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ், வெளியுறவு அமைச்சகத்தின் மேற்கு நாடுகளின் விவகார செயலாளர் விவேக் கட்ஜூ ஆகியோர் கூறுகையில்:
பிரதமரின் இந்த பயணத்தின் போது இந்தியா-கனடா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவில் அணிசக்தி தயாரிக்க தேவைப்படும் அணு மூலப் பொருட்களை கனடாவில் இருந்து இறக்குமதி செய்ய முடியும்.
இது தவிர கலாச்சாரம், அறிவியல் தொழில்நுட்பம், சுகாதாரம், உயர் கல்வி, வேளாண்மை உள்ளிட்ட பல துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன.
இந்த மாநாட்டில் இதற்கு முன் வாஷிங்டன், லண்டன் மற்றும் பீட்ஸ்பெர்க் ஆகிய நகரங்களில் நடந்த ஜி-20 மாநாடுகளில் எடுக்கப்பட்ட முடிவுகளின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்யப்படும். அந்த ஆய்வின் அடிப்படையில் தான் தலைவரகள் எதிர்கால திட்டங்களை முடிவு செய்வார்கள்.
இந்த மாநாட்டில் பொருளாதார சரிவு, கடன் வழங்கும் ஒழுங்கு முறைகளில் சீர் திருத்தம், சர்வதேச நிதி நிறுவனங்களில் சீர் திருத்தம் ஆகியவை பற்றியும் ஆய்வு செய்யப்படும் என்றனர்.
இந்த ஆண்டு இறுதியில் சியோல் நகரில் நடைபெறவிருக்கும் அடுத்த ஜி-20 மாநாடு பற்றியும் விவாதிக்கப்படும்.