நக்சல் பாதித்த பகுதிகளுக்கு ரூ 3400 கோடி வளர்ச்சி நிதி!
டெல்லி: மத்திய மற்றும் கிழக்குப் பகுதி மாநிலங்களில் நக்சல் பாதித்த பகுதிகளின் வளர்ச்சிக்காக ரூ 3400 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
மேற்கு வங்கம், ஒரிசா, பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளன. மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் பணியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லைப் பாதுகாப்புப் படை போலீஸ் மற்றும் மாநில போலீசார் கொண்ட கூட்டுப்படைக் குழு ஈடுபட்டுள்ளது.
அடுத்தக் கட்டமாக மாவோயிஸ்டுகளை ஒழிக்க ராணுவத்தின் மேலும் சில பிரிவுகளை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய விமானப்படையின் 15 ஹெலிகாப்டர்கள் மாவோயிஸ்டுகளைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.
இது தவிர மாவோயிஸ்டுகளை அழிக்க ராணுவ அதிகாரிகளையும் பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. காடுகளுக்குள் புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றுதல், வெடிகுண்டுகளை செயல் இழக்கச் செய்தல் போன்ற பணிகளில் சிறந்து விளங்கும் ராணுவ அதிகாரிகள் பயன் படுத்தப்படுவார்கள் என்று தெரியவந்துள்ளது.
இதற்கிடையே மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிக்க பகுதிகளில் வசிக்கும் மக்களின் மனதை மாற்றுவதற்காக மத்திய அரசு சிறப்பு நிதியை ஒதுக்கி உள்ளது. இதற்கு மட்டும் மொத்தம் ரூ. 3,400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி மூலம் எந்தெந்த மாவட்டங்களில் வளர்ச்சித் திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்பது அடுத்த வாரம் மத்திய அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.